பயன்பாடில்லாத விவசாய நிலம் அதிகரிப்பு : வேளாண் முதன்மை செயலர் வருத்தம்
பயன்பாடில்லாத விவசாய நிலம் அதிகரிப்பு : வேளாண் முதன்மை செயலர் வருத்தம்
ADDED : ஜூலை 23, 2011 12:03 AM
கோவை : ''விளைநிலங்களாக இருந்தும், வேளாண் உற்பத்திக்கு பயன்படுத்தப்படாமல் உள்ள நிலத்தின் பரப்பு, பலமடங்கு அதிகரித்திருப்பது வேதனையளிக்கிறது,'' என, பல்கலை விழாவில் வேளாண் முதன்மை செயலர் பேசினார்.
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நடந்த, புதிய பயிர் ரகங்கள் வெளியீடு மற்றும் உழவர் தின விழாவில், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலர் அருள்மொழி பேசியதாவது: விவசாயத்தில், எண்ணற்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவுப்பொருள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது. விவசாயிகளின் வாழ்வு மேம்பட, அவர்களின் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. அதேவேளையில் இயற்கை வளங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாறி வருகிறது.
நவீன தொழில்நுட்பம் காரணமாக கடந்த, 90 ஆண்டுகளில் நெல் உற்பத்தி நான்கு மடங்காக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், கடந்த, 1971- 72 முதல் 2009-10 வரை 12 லட்சம் எக்டர் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது; விளைநிலங்களாக இருந்தும் வேளாண் உற்பத்திக்கு உட்படுத்தாமல் உள்ள நிலத்தின் பரப்பு, 5 லட்சம் எக்டரிலிருந்து, 15 லட்சம் எக்டராக அதிகரித்திருப்பது வேதனையளிப்பதாகும். விளைநிலம், தண்ணீர் போன்றவை விவசாயத்துக்கு முக்கியம். இங்கு 45 சதவீதம் மட்டுமே பருவ மழையை நம்பியுள்ளோம். எனவே, மீதித்தேவைக்கு கட்டாயமாக தண்ணீர் வளத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. எனவே, ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்கவும், தண்ணீர் வளத்தை அதிகரிக்கவும், தொழில்நுட்பத்தை விவசாயிகளிடம் புகுத்தவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கேற்ப பட்ஜெட்டில் திட்டங்கள் தீட்ட வேண்டும். அப்போதுதான், இரண்டாவது பசுமை புரட்சி ஏற்படுத்தி, விவசாயத்தை மேம்படுத்த முடியும். விவசாயிகள் மாற்றுத்தொழிலுக்கு மாறாதிருப்பதும் மிகவும் முக்கியம். இவ்வாறு, முதன்மை செயலர் பேசினார்.