ஒலிம்பிக் நடத்தும் நாடாக இந்தியா மாறியுள்ளது; கே.ஆர்.எஸ்., பள்ளி விழாவில் அண்ணாமலை பெருமிதம்
ஒலிம்பிக் நடத்தும் நாடாக இந்தியா மாறியுள்ளது; கே.ஆர்.எஸ்., பள்ளி விழாவில் அண்ணாமலை பெருமிதம்
UPDATED : ஆக 27, 2025 06:40 AM
ADDED : ஆக 26, 2025 12:57 AM

மதுரை: 'ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்காத நிலையில் இருந்த இந்தியா, பிரதமர் மோடியின் முயற்சியால் 2036 ல் ஒலிம்பிக் நடத்தும் அளவுக்கு உயர்ந்துள்ளது' என்று மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் (கே.ஆர்.எஸ்.,) சி.பி.எஸ்.இ., பள்ளி 30 வது விளையாட்டு விழாவில் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.
இப்பள்ளி விளையாட்டு விழா செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு தலைமையில் நடந்தது. முதல்வர் சூர்யபிரபா வரவேற்றார். ஒலிம்பிக் தீபத்தை அண்ணாமலை ஏற்றினார். தேசிய, விளையாட்டு, பள்ளிக் கொடிகள் ஏற்றப்பட்டன. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு, அண்ணாமலை ஏற்றனர்.
மாணவர்கள் விடுத்த அழைப்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: மாணவர்கள் விளையாட்டு வீரராக இருந்தால்தான் வாழ்க்கை பக்குவப்படும். அடுத்த 30 ஆண்டுகளில் நீங்கள்தான் சிறந்த குடிமகனாக உருவாகுவீர்கள். விழாவில் பங்கேற்க 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடிதம் எழுதி என்னை அழைத்தது இந்தப் பள்ளியில்தான் நடந்துள்ளது.
விளையாட்டை மனிதரிடம் இருந்து பிரித்து பார்க்க முடியாது. விளையாட்டால் உடல், மனம் பக்குவப்படும். ஒருங்கிணைப்பு மனப்பான்மை வளரும்.சுவாமி விவேகானந்தர், 'நீங்கள் பகவத்கீதை, புராணங்கள் படிக்கலாம். அவற்றை முழுமையாக படிக்க உடலில் ஆற்றல் வேண்டும்' என்றார்.
அந்த ஆற்றல் வேண்டுமானால் விளையாட்டு இருந்தால்தான் கிடைக்கும். நல்ல உடம்பு, ஆரோக்கியமான மனது இருந்தால்தான் எதையும் புரிந்து கொள்ள முடியும்.
நுாறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள் என சுவாமி விவேகானந்தர் கேட்டார். எக்கு போன்ற உடம்பு, கூர்மையான கண்கள், வேகமாக ஓடக்கூடிய ரத்தம் உள்ள நுாறு இளைஞர்களைத்தான் அவர் கேட்டார். இதுபோன்ற இளைஞர்கள்தான் நாட்டின் தலைவிதியை மாற்ற முடியும் என கருதினார்.
மாணவர்களுக்கு விளையாட்டு மைதானத்தில்தான் பிரச்னைகளை தீர்க்கும் பக்குவம் கிடைக்கும். விளையாட்டுக்கு தலைமைப் பண்பு அவசியம். நல்ல சிப்பாய்தான் வருங்கால ராணுவத் தளபதியாக வரமுடியும். குழு செயல்பாட்டால்தான் தலைமை பண்பும், செயல்படுத்தும் தகுதியும் கிடைக்கும். எனவே அடிப்படை விளையாட்டுகள் குழந்தைகளுக்கு அவசியம்.
விளையாட்டில் வாய்ப்புகளின் உச்சம் ஒலிம்பிக். அதனால் மாணவர்கள் இன்னும் திறனுடன் விளையாட கற்றுக் கொள்ள வேண்டும்.அதற்காக உங்கள் சிந்தனை, மூச்சு, செயல்பாடு எல்லாம் அதை நோக்கியே இருக்க வேண்டும்.நீங்கள் எதைச் செய்தாலும் அர்ப்பணிப்பு, நேர்மை, பணிவுடன் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விளையாட்டு போட்டிகளில் முதலிடம் வென்ற சிவாஜி அணி,இரண்டாமிடம் வென்ற தாகூர் அணிகளுக்கு அண்ணாமலை, டாக்டர் எல்.ராமசுப்பு ஆகியோர் இணைந்து கேடயம் வழங்கினர்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மீனாட்சி, சக்திபிரகாஷ், தாசரதி செய்திருந்தனர்.