இந்தியா - ஜோர்டான் வர்த்தகம் ரூ.45,000 கோடியாக உயர்த்த இலக்கு
இந்தியா - ஜோர்டான் வர்த்தகம் ரூ.45,000 கோடியாக உயர்த்த இலக்கு
ADDED : டிச 17, 2025 04:13 AM

அம்மான்: இந்தியா - ஜோர்டான் இடையேயான இரு தரப்பு வர்த்தகத்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 45,000 கோடி ரூபாயாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துஉள்ளார்.
அரசு முறை பயணமாக ஜோர்டான் சென்றுள்ள பிரதமர், அந்நாட்டு அரசர் இரண்டாம் அப்துல்லாவுடன் இந்தியா - ஜோர்டான் வணிக கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் ஜோர்டான் இளவரசர் ஹுசைன் மற்றும் வர்த்தக, முதலீட்டு அமைச்சர்களும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியா - ஜோர்டான் உறவு என்பது வரலாற்று ரீதியான நம்பிக்கையும், எதிர்கால பொருளாதார வாய்ப்புகளும் ஒன்றுசேரும் இடமாகும்.
வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரமாக விளங்கும் இந்தியாவில் முதலீடு செய்ய, ஜோர்டான் நிறுவனங்களுக்கு அளவற்ற வாய்ப்புள்ளது.
இந்தியாவின் 140 கோடி நுகர்வோர் சந்தை, வலுவான தயாரிப்பு துறை அடித்தளம் மற்றும் வெளிப்படையான கொள்கை முடிவுகளை சாதகமாக பயன்படுத்தி பலன்பெற, இங்குள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இந்தியா தான் ஜோர்டானின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளி.
வணிகத்தில் எண்கள் முக்கியம் என்றாலும், இதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், நீண்ட கால, நம்பத்தகுந்த கூட்டாண்மையை உருவாக்க விரும்புகிறேன்.
இதன் அடிப்படையில், அடுத்த ஐந்து ஆண்டு களில் இந்தியா, ஜோர்டான் இருதரப்பு வர்த்தகத்தை 45,000 கோடி ரூபாயாக அதிகரிக்க முன்மொழிகிறேன்.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், நிதி தொழில் நுட்பம், மருத்துவ மற்றும் விவசாய தொழில்நுட்ப துறைகளில் இரு நாட்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இணைந்து செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மருந்து மற்றும் மருத்துவ சாதன துறைகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே, புவியியல் ரீதியாக ஜோர்டானின் சாதகமான நிலையை பயன்படுத்தி, இத்துறைகளில் மேற்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளுக்கான மையமாக ஜோர்டானை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை திட்டங்களுக்கு நிதியுதவி, நீர் மறுசுழற்சி ஆகிய பிரிவுகளில் இரு நாட்டு நிறுவனங்களும் மேலும் இணைந்து செயல்படலாம்.

