அமெரிக்காவை திருப்திப்படுத்த இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு; கேரள முதல்வர் விமர்சனம்
அமெரிக்காவை திருப்திப்படுத்த இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு; கேரள முதல்வர் விமர்சனம்
ADDED : அக் 21, 2024 11:25 AM

திருவனந்தபுரம்: அமெரிக்காவை திருப்திப்படுத்துவதற்காகவே, இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினரிடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. இருதரப்பினரும் சரமாரியாக தாக்குதல் நடத்தி கொண்டதில், ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து வரும் கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அரசின் நடுநிலையையும் விமர்சித்துள்ளார்.
கண்ணனூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகளே இதனை எதிர்க்கின்றன. இதில், இந்தியாவின் நிலைப்பாடு என்ன? சிறந்த வரலாறு கொண்ட இந்தியா எங்கே உள்ளது? ஓட்டெடுப்பை தவிர்த்ததன் மூலம் பாலஸ்தீனத்திற்கு எதிரான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தவில்லை. மாறாக, இஸ்ரேல் பக்கம் நிற்பதை தான் உணர்த்துகிறது.
இத்தாலி போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விநியோகத்தை நிறுத்தி விட்டன. ஆனால், இந்தியா தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது. இவ்வாறு முதல்வர் விஜயன் பேசினார்.

