பள்ளிக்கல்வி துறையில் புதுமை திட்டங்கள்: அரசு பெருமிதம்
பள்ளிக்கல்வி துறையில் புதுமை திட்டங்கள்: அரசு பெருமிதம்
ADDED : நவ 24, 2025 12:26 AM

சென்னை: 'கடந்த நான்கரை ஆண்டுகளில், பள்ளிக்கல்வி துறையில், பல புதுமையான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
கொரோனா தொற்று பரவல் கால கற்றல் இடைவெளியை குறைக்க, 2021ல், 'இல்லம் தேடி கல்வி' திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு, 2024 - 25ம் கல்வியாண்டு வரை, 660 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, 95.9 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளின், அடிப்படை கல்வி அறிவு மற்றும் எண்ணறிவை மேம்படுத்த, 'எண்ணும் எழுத்தும் திட்டம்' துவக்கப்பட்டது.
இத்திட்டம் வாயிலாக, 37,767 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 25 லட்சம் மாணவ - மாணவியர் பயனடைந்து வருகின்றனர்.
அரசு பள்ளி மாணவ - மாணவியரை, சிறப்பு பயிற்றுநர்கள் வாயிலாக அடையாளம் காணவும், சிறப்பு கல்வி வழங்கவும், 'நலம் நாடி' செயலி வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம், 352 கோடி ரூபாய் செலவில், 38 மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இதில் படித்தவர்கள், முதன்மையான உயர்க்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுகின்றனர். குழந்தைகளிடம் இருக்கும் கலை உணர்வுகளை வெளிக்கொணரும் வகையில், பள்ளிகளில் கலை திருவிழாக்களும் நடத்தப் படுகின்றன.
அரசு பள்ளிகளில், 519 கோடி ரூபாய் செலவில், 22,931 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அனைத்து அரசு துவக்கப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த நான்கரை ஆண்டுகளில், பள்ளிக்கல்வி துறையில், பல புதுமையான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

