ADDED : டிச 18, 2024 05:29 PM

சென்னை: '' எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது,'' என த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார்.
அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பார்லிமென்டில் விவாதம் நடந்தது. இதில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, பார்லிமென்டில் அமளியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டதால், இரு அவைகளும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டன.
இது தொடர்பாக த.வெ.க., தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.
அம்பேத்கர்... அம்பேத்கர்... அம்பேத்கர்... அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம். எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த மத்தியஉள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.