ADDED : ஜன 25, 2026 05:46 AM
சென்னை: சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்ப தாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டம், கடந்த 20ம் தேதி துவங்கியது.
கவர்னர் ரவி உரை நிகழ்த்தி, முதல் கூட்டத்தை துவக்கி வைப்பார் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தன் உரையை துவங்கும் முன், தேசிய கீதம் இசைக் காததற்கு கவர்னர் அதிருப்தியை தெரிவித்தார்.
'சட்டசபை துவங்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்தும், கவர்னர் உரை முடிந்த பின் தேசிய கீதமும் இசைக்கப்படும்' என, சபாநாயகர் அப்பாவு தெளிவுபடுத்தினார்.
இதை ஏற்காத கவர்னர் ரவி, சட்டசபையில் இருந்து வெளியேறினார். இதையடுத்து, அரசின் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
இரண்டாம் நாள் சபை கூடியதும், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பிரமுகர்கள் மறைவிற்கு அஞ்சலி செலுத்தி ஒத்திவைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, கடந்த 22 மற்றும் 23ம் தேதிகளில், கவர்னர் உரை மீது விவாதம் நடந்தது.
கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு நேற்று, முதல்வர் ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். இதைதொடர்ந்து, ஒன்பது சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கடந்த 20ம் தேதி துவங்கிய சட்டசபை கூட்டத்தை நேற்று, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் தீர்மானத்தை, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு முன் மொழிந்தார். இதை ஏற்று, சபையை ஒத்திவைப்பதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
மீண்டும் சட்டசபை கூட்டம், அடுத்த மாதம் நடக்க உள்ளது. அப்போது, தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

