இடைக்கால பட்ஜெட் தாக்கல்; 2.22 மணி நேரம் வாசித்தார் தங்கம் தென்னரசு
இடைக்கால பட்ஜெட் தாக்கல்; 2.22 மணி நேரம் வாசித்தார் தங்கம் தென்னரசு
UPDATED : பிப் 17, 2026 01:08 PM
ADDED : பிப் 17, 2026 09:58 AM

சென்னை: தமிழக இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் இன்று (பிப்ரவரி 17) தாக்கல் செய்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு இந்தாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:
வறுமையை ஒழிக்கும் போரை நாம் துவங்கி உள்ளோம். கடைக்கோடி தமிழரும் மாநிலத்தின் வளர்ச்சி பயணத்தில் பங்கு பெறும் சூழலை உருவாக்கி உள்ளோம். தமிழகத்தின் வளர்ச்சி முதல்வர் ஸ்டாலினால் வழி நடத்தப்படுகிறது. நாட்டிற்கே வழிகாட்டும் கடமையினை மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுத்தி வருகிறோம்.
ஏஐ உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும். உணவு உற்பத்தியில் தமிழகம் வரலாறு காணாத வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழர் பெருமையை பறை சாற்றும் வகையில் பல்வேறு அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாடே திரும்பி பார்த்தது!
ஐக்கிய நாடு சபை அங்கீகரித்த மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது; பிறமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை பாதுகாக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் 1 கோடியே 31 லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் ரூ. 5 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட போது இந்த நாடே திரும்பி பார்த்தது. பெண்கள் மகிழ்ச்சியில் திகைத்தனர். இதற்கு கோடானு கோடி பெண்களின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
புதிய வீடுகள்
சோழர் அருங்காட்சியகம், நவாய் அருங்காட்சியகம், நொய்யல் அருங்காட்சியகம் என மொத்தம் ரூ.285 கோடியில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. தமிழகத்தில் 10,649 புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
சவால்களை மீறி….
மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை
உள்ளிட்ட சவால்களை மீறியும் தமிழகம் வளர்ந்து வருகிறது. தமிழகம் இரட்டை
இலக்கு பொருளாதார வளர்ச்சியை அடைய பல்வேறு நல்ல திட்டங்களை முதல்வர்
ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக
நிதி வழங்கப்பட்டுள்ளது.
விடியல் பேருந்து
திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். 6 லட்சம்
சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19
தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் நலன் காக்கும் இத்தகையை
திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன. மகப்பேறு இறப்பு விகிதம்
மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழகத்தில் குறைவாக
உள்ளது.
41 சதவீதம்
நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீத பெண்கள் தமிழகத்தில் பணிபுரிகின்றனர். முதல்வரின்
காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. 19.34 லட்சம்
பேர் பயன் பெறும் இந்தத் திட்டத்திற்கு ரூ.1889 கோடி செலவு
செய்யப்பட்டுள்ளது.
10,637 குழந்தைகள் அன்புக் கரங்கள் திட்டம் மூலம்
பயனடைந்துள்ளனர். மூத்த குடிமக்களுக்கு 25 அன்பு சோலைகள்
அமைக்கப்பட்டுள்ளன. திருநங்கைகள் சுயமாக தொழில் செய்ய இந்த அரசு மானியம்
வழங்குகிறது. தாயுமானவர் திட்டத்தின் கீழ் 27 லட்சம் மூத்த குடிமக்கள் பயன்
பெற்றுள்ளனர்.
கப்பல் கட்டும் கொள்கை
கப்பல் கட்டுமானம்,
கப்பல் இயந்திரங்கள் உற்பத்தி ஆகிய துறைகளில் முதலீடுகளை ஈர்க்க தமிழகம்
கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்படும். இதனால் கப்பல்
கட்டுமானத்திற்கான உலகளாவிய மையமாக தமிழகம் உருவெடுக்கும்.
தூத்துக்குடியில் ரூ.5,200 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம்
கட்டப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில்
வசிப்போருக்கு ஒரு முறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் 77,800
இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்களுக்கு 3 கட்டங்களாக
ரூ.630 கோடியில் வீடுகள் கட்டித்தரப்படும். தமிழகத்தில் 10,649 புதிய
வீடுகள் கட்டித் தரப்படும்.
நவீன நூலகங்கள்
நெல்லை, கோவை,
திருச்சியில் ரூ.902 கோடியில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடிக்கு நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டோர், முதியோர்
உதவித் தொகைக்காக ரூ.5,463 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்ப்
புதல்வன் திட்டத்தில் இதுவரை 5,40,511 மாணவர்கள் ரூ.1000 பெறுகின்றனர்.
புதுமைப்பெண்
திட்டத்தில் 6,95,296 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 5
ஆண்டுகளில் 38 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கருணாநிதி கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டி
தரப்படும். தற்போது வரை 1.71 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன;
2030 ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது.
புதிய சரணாலயங்கள்
மக்கள் நல்வாழ்வு
துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.500 கோடி
மதிப்பீட்டில் தமிழக செமிகண்டக்டர் இயக்கம் நடைமுறைப்படுத்தப்படும்.
தரமணியில் மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படுகிறது.
திருச்சி, மதுரை, ஓசூரில் ரூ.1,070 கோடியில் புதிய டைடல் பார்க் பூங்கா
நிறுவப்பட்டும். வனவிலங்குகள் பாதுகாக்க 6 புதிய சரணாலயங்கள் அமைக்கப்படும். பூவிருந்தவல்லி - வடபழனி இடையே விரைவில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். இவ்வாறு தங்கம் தென்னரசு பேசினார்.
திருக்குறளை மேற்கோள் காட்டிய அமைச்சர்!
காலத்தை வென்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்கினை சொல்லி எனது உரையை தொடங்குகிறேன் என தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை
இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை. வள்ளுவரின் வாக்கினைப் பின்பற்றி நானிலம் போற்றும் வகையில், முதல்வர் ஸ்டாலினால் தமிழகத்தின் வளர்ச்சி வழிநடத்தப்பட்டு வருகிறது என தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தமிழக சட்டசபையில் 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 17) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இன்றைய சட்டசபை கூட்டத்தொடர் நிகழ்வு தினமலர் யுடியூப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

