ADDED : நவ 05, 2024 03:47 AM
கோவை: அருந்ததியருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி சார்பில், நாளை மறுதினம் சென்னையில் பேரணி நடத்தப்படும் என, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
அருந்ததியருக்கான 3 சதவீத உள் இடஒதுக்கீடு காரணமாக, தேவேந்திர குல வேளாளர்களும், வட மாவட்டங்களில் ஆதிதிராவிடர்களும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர்கள், ஆதிதிராவிடர்கள், அருந்ததியர் மற்றும் 70க்கும் மேற்பட்ட ஜாதிகள் அடங்கிய பட்டியல் பிரிவு மக்களுக்கு, 18 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் மாற்றம் செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு.
அருந்ததியர் உள் இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பில், பட்டியல் பிரிவினரையும் பிரித்து மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தீர்ப்பில், பட்டியலில் இடம்பெறும் எந்தவொரு பிரிவினருக்கும் முன்னுரிமை கொடுக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை.
இந்நிலையில், 3 சதவீதத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள அருந்ததியருக்கு, ஒட்டுமொத்த 18 சதவீதத்தையும் தாரைவார்க்கும் வகையில் அரசாணை பிறப்பித்து, கடந்த 15 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான புதிய பதவிகளையும் அருந்ததியருக்கு மட்டுமே கொடுத்து விட்டனர்.
தற்போது, 3 சதவீத உள் இடஒதுக்கீட்டை ஆதரித்து, ஒட்டுமொத்த 18 சதவீத இட ஒதுக்கீட்டையும் அருந்ததியருக்கு தாரைவார்த்து, பெரும்பான்மையான தேவேந்திர குல வேளாளர்கள் மற்றும் பறையர் சமூக மக்களை வஞ்சிப்பதே நோக்கமாக தெரிகிறது.
எனவே, இந்த 3 சதவீத உள் இடஒதுக்கீடு முன்னுரிமை அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி, நாளை மறுதினம் சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.