புதிய 'பெட்ரோல் பங்க்' அமைக்க போலி சான்றிதழ் விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றம்
புதிய 'பெட்ரோல் பங்க்' அமைக்க போலி சான்றிதழ் விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றம்
ADDED : பிப் 19, 2026 01:40 AM

சென்னை: சென்னையில் புதிய 'பெட்ரோல் பங்க்' அமைக்க, போலியான தடையில்லா சான்று வழங்கியது தொடர்பான வழக்குகளை, சி.பி.ஐ.,க்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் புதிய 'பெட்ரோல் பங்க்' அமைக்க, போலியாக பெறப்பட்ட தடையில்லா சான்று வாயிலாக, எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து உரிமம் பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வி.பி.ஆர்., மேனன் என்பவர், பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி., நேரில் ஆஜரானார்.
மேலும், 'இந்த முறைகேடு தொடர்பாக, நான்கு பேர் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நேர்மையான முறையில் விசாரணை நடந்துள்ளது' என தெரிவித்து, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு மனுதாரர் தரப்பில், 'இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை, சி.பி.சி.ஐ.டி., காப்பாற்றி வருகிறது. விசாரணை முறையாக நடக்கவில்லை' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், 'இந்த வழக்கை போலீசார் முழுமையாக விசாரிக்கவில்லை.
'சென்னையில் மட்டுமே 70க்கும் மேற்பட்ட மோசடிகள் நடந்து உள்ளதாக, மனுதாரர் ஆதாரப்பூர்வமாக நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
'எனவே, இவ்விவகாரத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறோம்.
'அதேநேரம் திண்டுக்கல் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை, சரியாக அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்துள்ளதால், அந்த இடங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசாரே விசாரணை நடத்தலாம்' என, உத்தரவிட்டனர்.

