ADDED : ஜூன் 19, 2025 12:33 AM
சென்னை:சிறுவன் கடத்தல் விவகாரத்தில், ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்ட, காவலர் மகேஸ்வரியின் சட்ட விரோத செயல்கள் மற்றும் சொத்து விபரங்களை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், களாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் காதல் திருமணம் செய்தனர்.
இவர்களை பிரிக்க முயற்சி செய்த, பெண்ணின் தந்தை வனராஜ், பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் மகேஸ்வரி ஆகியோர், ஏ.டி.ஜி.பி., ஜெயராம், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ., வுமான ஜெகன்மூர்த்தி ஆகியோர் உதவியுடன், தனுஷ் தம்பியான, 17 வயது சிறுவனை கடத்தியதாக, புகார் எழுந்தது.
திருவாலாங்காடு போலீசார், மகேஸ்வரி, வனராஜ் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். கடத்தல் சம்பவத்தின் சூத்திரதாரி மகேஸ்வரி என தெரிய வந்துள்ளது.
போலீசார் கூறியதாவது:
காவல் துறையில் இருந்து நீக்கப்பட்ட பின், மகேஸ்வரிக்கு சமூக விரோத கும்பல்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் உதவியுடன், ரியல் எஸ்டேட் தொழிலில், கட்டப்பஞ்சாயத்து செய்து வந்துள்ளார்.
போலீசாருடனும், சில அதிகாரிகளுடனும் நட்புடன் இருந்து வந்துள்ளார். இது குறித்தும், அவரது சட்ட விரோத செயல்கள், அவர் வாங்கிய சொத்துக்கள் ஆகியவை குறித்தும் விசாரித்து வருகிறோம். அவற்றை முடக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.