புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
ADDED : ஏப் 04, 2024 10:57 AM

சென்னை: இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாத கணக்கு வைத்து இருந்தவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை தொடர்பாக வெளியான நாளிதழில் செய்தியை மேற்க்கோள் காட்டி முதல்வர் ஸ்டாலின் ‛எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மோடியின் 'டிஜிட்டல் வழிப்பறி
!ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன? சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.
சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள். கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து,
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு? இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

