தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா? ராமதாஸ் கேள்வி
தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா? ராமதாஸ் கேள்வி
ADDED : நவ 29, 2024 09:31 PM

சென்னை:'' திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தில் மூவரை படுகொலை செய்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்படுவதற்கு இது தான் சான்றா?,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகிய மூவரை கொடூரமாக படுகொலை செய்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தளவுக்கு தமிழகத்தில் நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால், தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா? காவல்துறை அதன் கடமைகளைச் செய்கிறதா அல்லது ஆளுங்கட்சியினரின் குற்றங்களை மறைத்து, எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறாதா? என்ற வினா எழுகிறது. திராவிட மாடல் ஆட்சியில் எத்தனை வினா எழுப்பினாலும் விடை கிடைக்காது என்பது தான் வேதனையான உண்மை.
தமிழகத்தின் காவல்துறையினர் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினருக்கு இணையானவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டுப் பத்திரம் வாசித்து இரு நாட்கள் ஆவதற்குள் இப்படி ஒரு கொடூரம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்குக் கூட இயலாத நிலையில் தான் தமிழக அரசும், காவல்துறையும் உள்ளன. தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்படுவதற்கு இது தான் சான்றா? என்பதை அரசும், காவல்துறையும் விளக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள மக்களால் நிம்மதியாக வெளியில் தான் நடமாட முடியவில்லை என்றால், நிம்மதியாக வீட்டில் கூட உறங்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. ஆனால், மக்களின் துயரங்கள் எதையுமே புரிந்து கொள்ளாமல் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதையே மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தின் சட்டம் -ஒழுங்கை பாதுகாக்கவும், தமிழக மக்கள் அச்சமின்றி நிம்மதியாக வாழவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.