பிரதமர் தமிழகம் வருவது நல்லது தானே: அண்ணாமலை பதிலடி
பிரதமர் தமிழகம் வருவது நல்லது தானே: அண்ணாமலை பதிலடி
ADDED : மார் 17, 2024 01:50 PM

திருப்பூர்: பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருவது நல்லது தானே என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திருப்பூரில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலையிடம், பிரதமரின் தமிழக வருகை குறித்து தி.மு.க.,வினர் விமர்சனம் செய்து வருகின்றனர் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அண்ணாமலை அளித்த பதில்: கடந்தாண்டு 4 முறை பிரதமர் தமிழகம் வந்துள்ளார். அப்போது தேர்தலுக்காக அவர் வந்தாரா. தேர்தலை மனதில் வைத்து பிரதமர் தமிழகம் வரவில்லை. தமிழகம் மட்டுமின்றி மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பிரதமர் சென்று வந்துள்ளார்.
மோடியின் பயணத்தை விமர்சிக்கும் திமுக.,வினர் முதல்வர் வெளியே வராதது குறித்து பேசுவார்களா?. பிரதமரின் வருகையால் தோல்வி பயத்தில் தி.மு.க., குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறது. மோடியின் வருகையை தேர்தல் தேதியோடு ஒப்பிட்டு பேசி எதிர்க்கட்சிகள் தங்களின் தோல்விக்கான காரணத்தை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் அடிக்கடி தமிழகம் வருவது நல்லது தானே. பி.எம்.ஸ்ரீ., பள்ளி திட்டத்தில் கையெழுத்து போடும் திமுக அரசு புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

