பொறுப்புணர்வுள்ள மனித குலத்தை உருவாக்குவது அவசியம்; சத்குரு
பொறுப்புணர்வுள்ள மனித குலத்தை உருவாக்குவது அவசியம்; சத்குரு
ADDED : ஆக 12, 2026 06:21 AM

தொண்டாமுத்தூர்: ருமேனியா நாட்டில் நடந்த அன்டோல்ட் இசை விழாவில், நம்முடைய வாழ்க்கைக்காகவும், இனி வாழப்போகும் தலைமுறைகளுக்காகவும், மகிழ்ச்சியான விழிப்புணர்வான பொறுப்புணர்வுள்ள மனித குலத்தை உருவாக்குவது மிகவும் அவசியம் என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
ருமேனியா நாட்டில் உள்ள நபோகா நகரில், ஆண்டுதோறும் 'அன்டோல்ட்' என்ற பிரம்மாண்ட இசை விழா நடக்கும். இந்தாண்டு, இசை விழா, கடந்த, 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடந்தது. இதில், 8ம் தேதியில் நடந்த விழாவில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மக்களின் மன நலனை மேம்படுத்தும் பயிற்சிகளை வழங்குவதற்காக, சத்குருவின் 'கான்ஷியஸ் மியூசிக் சர்க்கிள்' என்ற அமைப்பு, அன்டோல்ட் இசை விழாவில் இணைந்தது. இவ்விழாவில், 200க்கும் மேற்பட்ட உலகின் முன்னணி இசை கலைஞர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் ஈஷா அறக்கட்டளை நிறுவன சத்குரு பேசுகையில், 'இந்த இசை திருவிழாவில் நாம் கலந்து கொள்வது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல. நீங்கள் இங்கே ஒரே மனித குலமாக, ஒரே சத்தியமாக ஒன்றிணைந்து இருக்கிறீர்கள். நம்முடைய இந்த வாழ்க்கைக்காகவும், இந்த பூமியில் இனிமேல் வாழப்போகும் தலைமுறைகளுக்காகவும், மகிழ்ச்சியான, விழிப்புணர்வான, பொறுப்புணர்வுள்ள மனித குலத்தை உருவாக்குவது. இதை நாம் நிகழச் செய் வோம்,'என்றார்.
