வாக்குறுதி அளித்து 6 ஆண்டுகளாகிறது; முதல்வருக்கு நினைவுபடுத்திய அரசு டாக்டர்கள்!
வாக்குறுதி அளித்து 6 ஆண்டுகளாகிறது; முதல்வருக்கு நினைவுபடுத்திய அரசு டாக்டர்கள்!
ADDED : அக் 29, 2025 07:01 AM

எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்து, 'தி.மு.க., ஆட்சி அமைந்ததும் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என, அரசு டாக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்து, நேற்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவு பெற்றதாக, அரசு டாக்டர்கள் புகைப்படம் வெளியிட்டு, முதல்வருக்கு நினைவுபடுத்தினர்.
கருணாநிதி முதல்வராக இருந்த போது, அரசு டாக்டர்களுக்கான ஊதிய உயர்வு சம்பந்தமான அரசாணை 354 வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை அதன் பின் வந்த அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தவில்லை. இதனால் மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் அரசு டாக்டர்கள் ஊதியம் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.
ஊதிய உயர்வு தொடர்பான அரசாணையை அமல்படுத்தவும், டாக்டர்கள் காலி பணியிடங்களை நிரப்பவும் வலியுறுத்தியும் அரசு டாக்டர்களுக்கான கூட்டமைப்பு சார்பில், 2019 அக்., 25ம் தேதி முதல், சில டாக்டர்கள், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் ஒரு வாரம் வரை நீடித்தது.அப்போது, போராட்டத்தில் சில டாக்டர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடைசி வரை டாக்டர்களின் இந்த போராட்டத்தை, அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்த பழனிசாமியோ, சுகாதார துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரோ கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் வரிசை கட்டி மருத்துவமனைக்கு சென்று, டாக்டர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இந்த வரிசையில், அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், அக்., 28ம் தேதி, கட்சி மூத்த நிர்வாகிகளுடன், ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று, போராட்டம் நடத்திய டாக்டர்களை சந்தித்தார்.
அப்போது, 'தி.மு.க., ஆட்சியில் கருணாநிதி வெளியிட்ட அரசாணையை அமல்படுத்த தானே நீங்கள் போராடுகிறீர்கள். இந்த ஆட்சியில் அதை நடைமுறைப்படுத்த மாட்டர். அடுத்தது தி.மு.க., ஆட்சி தான் அமையும். அப்போது உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன். நீங்கள் உங்கள் உடல் நலத்தை வருத்திக் கொள்ளாமல், போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும்' என, கோரிக்கை வைத்தார்.
அவர் சொன்ன மாதிரியே, அடுத்த தேர்தலில் தி.மு.க., ஆட்சி அமைந்தது. டாக்டர்களும் அதே கோரிக்கையை வலியுறுத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். ஆட்சி முடிய இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையிலும், டாக்டர்களின் அந்த கோரிக்கை மட்டும் நிறைவேறிய பாடில்லை.
இந்நிலையில், 'ஸ்டாலின் எங்களை மருத்துவமனையி ல் சந்தித்து நேற்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. 'ஆனால், கோரிக்கைகள் தான் நிறைவேற்றப்படவில்லை. அவருக்கு ஞாபகப்படுத்துகிறோம்' எனக்கூறி, அரசு டாக்டர்கள் சமூக வலைதளங்களில், அது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர்.
நமது நிருபர்

