ஹவாலா பண பரிமாற்றத்தில் ஜாபர் சாதிக் தொடர்பு அம்பலம்
ஹவாலா பண பரிமாற்றத்தில் ஜாபர் சாதிக் தொடர்பு அம்பலம்
ADDED : ஏப் 20, 2024 05:08 AM

சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக், 40 கோடி ரூபாய் வரை ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைதாகி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து, எட்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அவற்றின் வாயிலாக, ஜாபர் சாதிக் 'நெட்ஒர்க்' குறித்து துப்பு துலக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக, திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, போதைப்பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணத்தில், 40 கோடி ரூபாயை படம் தயாரிக்க, ஜாபர் சாதிக் சட்ட விரோதமாக முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின.
இதையடுத்து, ஜாபர் சாதிக்குடன் மிக நெருக்கமாக இருந்த சென்னை மண்ணடியைச் சேர்ந்த, ஹவாலா முக்கிய புள்ளி ஒருவரை, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
அவர் வாயிலாக, ஜாபர் சாதிக், 40 கோடி ரூபாய் வரை ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர் குறித்த விபரங்களை வெளி யிட மறுத்து விட்டனர்.

