ADDED : மே 10, 2025 04:32 AM
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் அங்கமாலியை சேர்ந்தவர் வினாயகன். மலையாள நடிகர். தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். 2023-ல் ரஜினியின் ஜெயிலர் படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்திருந்தார்.
இவர் அடிக்கடி பொது இடங்களிலும் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு வந்தார்.
சமீபத்தில் ஐதராபாத் விமான நிலையத்தில் போதையில் தகராறு செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் குடிபோதையில் இருந்த அவர் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
போலீசார் அங்கு சென்று வினாயகனை கைது செய்தனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவர் மது குடித்திருந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அஞ்சல மூடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றபோது 'என்னை ஏன் இங்கு வைத்துள்ளீர்கள் 'என்று கேட்டு போலீசாரிடமும் தகராறு செய்துள்ளார்.
அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.