ADDED : ஆக 03, 2025 02:56 AM
சென்னை: 'தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு செயலர் அலெக்ஸிஸ் சுதாகர் மீதான, மூன்று வழக்குகளில் அவரை கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவுகள் செல்லாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அலெக்ஸிஸ் சுதாகரை, கடந்தாண்டு ஜூனில் மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் பண மோசடி, ஆள் கடத்தல் தொடர்பாக, கோவை குனியமுத்துார், துடியலுார் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும், அலெக்ஸிஸ் சுதாகர் கைது செய்யப்பட்டார்.
பின், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை, அறிவுரை கழகம் ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து, மூன்று வழக்குகளிலும், அலெக்ஸிஸ் சுதாகர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், மூன்று வழக்குகளிலும் கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவுகளை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அவர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், “மனுதாரரிடம் மூன்று வழக்குகளில் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல, குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.
''இது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானது. எனவே, அலெக்சிஸ் சுதாகரை கைது செய்து, சிறையில் அடைத்த உத்தரவுகள் செல்லாது,” என உத்தரவிட்டார்.