2017ல் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம்: 56 பேர் விடுதலை
2017ல் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம்: 56 பேர் விடுதலை
ADDED : ஜன 30, 2026 06:48 AM
மதுரை: ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரில் நடந்த போராட்டம் தொடர்பாக பதிவான வழக்கில் 56 பேரை விடுதலை செய்தது மதுரை நீதிமன்றம்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் 2016ல் தடை விதித்தது.
தடையை நீக்க வலியுறுத்தி 2017ல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது. பின் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான புது சட்டம் சட்டசபையில் நிறைவேறியது. ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்த வலியுறுத்தி 2017ல் அலங்காநல்லுாரில் மத்திய கூட்டுறவு வங்கி முன் போராட்டம் நடந்தது. தடையை மீறி, சட்டவிரோதமாகக்கூடி போராட்டம் நடத்தி, பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி, சில போலீசாரை பணி செய்யவிடாமல் தாக்கியதாக மதுரை சீனிவாசன், சென்னை சையது உமர் முக்தர் உள்ளிட்ட 56 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணை மதுரை 5 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று அங்கு 56 பேரும் ஆஜராகினர்.
நீதிபதி ஜோசப் ஜாய் பிறப்பித்த உத்தரவு: குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என்றார்.

