'ஜனநாயகன்' பட விவகாரம்; தனி நீதிபதி உத்தரவு ரத்து
'ஜனநாயகன்' பட விவகாரம்; தனி நீதிபதி உத்தரவு ரத்து
UPDATED : ஜன 28, 2026 01:49 PM
ADDED : ஜன 28, 2026 07:57 AM

சென்னை: விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்துக்கு, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் உடனே தணிக்கை சான்று வழங்கும்படி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
விஜய் நடித்த, ஜன நாயகன் படம், பொங்கலை முன்னிட்டு, ஜன., 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என, படக்குழு அறிவித்தது. படத்துக்கு சி.பி.எப்.சி., எனும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. அதனால், தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்., புரொடக்சன்ஸ் எல்.எல்.பி., என்ற தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி பி.டி.ஆஷா, படத்துக்கு உடனே தணிக்கை சான்று வழங்க உத்தரவிட்டார். அந்த உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. தணிக்கை வாரியம் தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில், மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகினர்.
அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதை அடுத்து, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவு:
திரைப்படத்தில், ராணுவ சின்னங்கள், மத நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அன்னிய சக்திகள் நாட்டில் கலவரம் ஏற்படுத்துவது போல காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தீவிரமான புகார்கள் வந்து உள்ளதால், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப, தணிக்கை வாரியம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தீவிரமான புகார் கூறப்பட்ட நிலையில், வழக்குக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காமல், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து, பட நிறுவனம் மனு தாக்கல் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

