ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி 6 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி 6 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்
UPDATED : ஆக 14, 2025 10:09 AM
ADDED : ஆக 14, 2025 02:52 AM

சென்னை: நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளை பாதிக்கும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசி திட்டம், ஆறு மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யய பட்டுள்ளது.
சென்னை, செனாய் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஜப்பானிய தடுப்பூசி திட்டத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார். பின், அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை, இந்நோய் அதிகம் பாதிக்கும். இந்த வகை மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசி திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தற்போது, சென்னையில் இரண்டு மண்டலங்களில் மட்டும் தடுப்பூசி திட்டம் இருந்த நிலையில், மற்ற 13 மண்டலங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
அத்துடன், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, நாகப்பட்டினம், வேலுார் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பானிய மூளைக்காய்ச்சல், சில வகையான, 'கியூலெக்ஸ்' கொசுக்களால் பரவும் நோய். நரம்பு மண்டலத்தை பாதித்து, கடுமையான சிக்கலை ஏற்படுத்துகிறது.
இதனால், இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால், அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்நோய் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் கூட, நரம்பியல் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளை கண்டறிந்து, தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. 1 முதல் 15 வயது வரையிலான, 27.63 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.