ADDED : பிப் 15, 2024 01:59 AM
சென்னை:ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை, போயஸ் கார்டனில், ஜெயலலிதா வசித்த வேதா நிலைய வீட்டை, நினைவு இல்லமாக மாற்றி அமைக்கவும் பராமரிக்கவும், நீண்ட கால ஏற்பாடுகளாக, ஒரு அறக்கட்டளையை நிறுவ, 2020ம் ஆண்டு தமிழ்நாடு ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம், தமிழக அரசால் இயற்றப்பட்டது.
ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் அந்த நிலம் மற்றும் கட்டடத்தை, ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதன்படி, கட்டடத்தின் சாவி வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனவே, ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டத்தின் நோக்கம், தற்போது செயல்பாட்டில் இல்லை. எனவே, அந்த சட்டத்தை ரத்து செய்ய, அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட மசோதாவை, நேற்று சட்டசபையில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தாக்கல் செய்தார்.

