தயாநிதி, கலாநிதி வீடுகளில் ரெய்டு ஏமாற்றுவேலை: சி.பி.ஐ., நடவடிக்கை குறித்து ஜெயலலிதா பேட்டி
தயாநிதி, கலாநிதி வீடுகளில் ரெய்டு ஏமாற்றுவேலை: சி.பி.ஐ., நடவடிக்கை குறித்து ஜெயலலிதா பேட்டி
UPDATED : அக் 12, 2011 12:50 AM
ADDED : அக் 11, 2011 11:12 PM

சென்னை:''கலாநிதி, தயாநிதி வீடுகளில் சி.பி.ஐ., ரெய்டு நடத்தியிருப்பது, மக்களை ஏமாற்ற நடந்த கண்துடைப்பு வேலை,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஏர்செல் நிறுவனத்திற்கு, அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தது, ஏர்செல் பங்குகளை விற்க, சிவசங்கரனை நிர்பந்தித்தது தொடர்பாக, தயாநிதி மற்றும் கலாநிதி உள்ளிட்டோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிந்துள்ளது.
இதையொட்டி, அவர்களது வீடுகளில், சி.பி.ஐ., நேற்று முன்தினம் ரெய்டு நடத்தியது. ஆனால், நான்காண்டுகள் கால தாமதமாக நடந்த இந்த ரெய்டு, வெறும் பார்மாலிட்டி என்றும், கண்துடைப்பு என்றும் பல்வேறு தரப்பில் கருத்துகள் வெளியாகியுள்ளன.
சி.பி.ஐ.,யின் காலதாமதமான ரெய்டு குறித்து, முதல்வர் ஜெயலலிதாவிடம், நிருபர்கள் கேட்டதற்கு, அவர் அளித்த பதில்: மாறன் சகோதரர்கள் மற்றும் அவர்களது அலுவலகங்கள், நெருங்கியவர்களிடம் சி.பி.ஐ., நடத்திய ரெய்டு, மக்களை ஏமாற்றுவதற்காக செய்யப்பட்ட வெறும் கண்துடைப்பு செயல் போல உள்ளது. எனினும், இந்த ரெய்டுகள் மூலம், ஏதாவது வெளிவரும் என்று நம்புவோம். ஆனால், இது, மக்களை மோசடி செய்ய நடந்த ஒரு செயலாகவே தெரிகிறது.காரணம், இந்த ஊழல் குறித்து, மீடியாக்களில் முதலில் செய்தி வெளிவந்து, நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த நான்கு ஆண்டுகளில், ஏராளமான உருப்படியான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம்.இந்த நான்கு ஆண்டுகள் இடைவெளியில், கலாநிதி, தயாநிதி சகோதரர்கள், தங்களது வீடுகள் அல்லது அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட ஆவணங்களை இன்னும் வைத்திருப்பர் என்பதை, கற்பனை செய்யவே முடியவில்லை. எனவே, இந்த ரெய்டுகளால் ஏதாவது வெளிவருகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.
தப்ப முடியாது
ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்த பல்வேறு உண்மைகளை, சுப்ரீம்கோர்ட்டில் வெளிக்கொண்டு வந்த சுப்ரமணியசாமி, டில்லியிலிருந்து, தொலைபேசியில், 'தினமலருக்கு' அளித்த சிறப்பு பேட்டி:கலாநிதி, தயாநிதி வீடுகளில் பார்மாலிட்டிக்காக சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். ரெய்டு நடத்தாவிட்டால், ஏன் ரெய்டு நடத்தவில்லை என, சுப்ரீம்கோர்ட்டிலும் கேள்வி வரும். இந்த வழக்கு தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே, நான் பல உண்மைகளை வெளியே கொண்டு வந்தேன். அதனால், இப்போது அவர்களது வீட்டில் ஆவணங்கள் கிடைத்ததா; கிடைக்கவில்லையா என்பது முக்கியமல்ல. எப்படியானாலும், அண்ணனும், தம்பியும் இந்த வழக்கிலிருந்து இனி தப்ப முடியாது. அதற்கான அனைத்து ஆதாரங்களும் சிக்கியுள்ளன. இந்த வழக்கில், மற்றொரு பிரச்னையை சி.பி.ஐ., விசாரிக்கவில்லை. ஏர்செல் பங்குகளை வாங்கிய, இலங்கைத் தமிழரான அனந்தகிருஷ்ணன், மாறன் சகோதரர்களுக்கு நண்பராக இருந்துள்ளார். இலங்கையை சேர்ந்த அவருக்கு, விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய உறவு உண்டு. அதனால், சன் 'டிவி'க்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு இருந்ததா என்பது குறித்து, சி.பி.ஐ., ஏன் விசாரிக்கவில்லை என்றும், விசாரணை நடத்தக் கோரியும், சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளேன். பொறுத்திருந்து பாருங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
எப்படியானாலும், தயாநிதி, கலாநிதி மீதான சி.பி.ஐ.,யின் பிடி தளராது என்பதால், அடுத்தடுத்த விசாரணைகளில், பல்வேறு திருப்பங்கள் ஏற்படும் என, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

