சொத்து குவிப்பு வழக்கு: ஜெ., மனு மீதான விசாரணை ஆகஸ்ட்1ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சொத்து குவிப்பு வழக்கு: ஜெ., மனு மீதான விசாரணை ஆகஸ்ட்1ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 27, 2011 02:41 PM

பெங்களூரு:வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அதன் பின்னர் வந்த, தி.மு.க., அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு பல்வேறு கால கட்டங்களை தாண்டி, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக அவ்வப்போது, கர்நாடக ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் கடந்த 14ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா, சிறப்பு கோர்ட் வழக்கு இழுத்தடிக்க எதிர்தரப்பினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். கோர்ட் நடைமுறையை அவர்கள் பின்பற்ற வேண்டும். வழக்கு விசாரணையை ஒத்திவைக்க அனுமதிக்கக் கூடாது. இ.பி.கோ., 313ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவதற்கான தேதியை குறிப்பிட வேண்டும்'' என்றார். இதையடுத்து, சிறப்பு கோர்ட் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், 313வது விதியின் கீழ், தங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கு, வரும், 27ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அன்றைய தினம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஆஜராக வேண்டும்'' என்றார்.
இந்நிலையில், இவ்வழக்கில் சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன் அவரது உறவினர் இளவரசியும் நீதிபதி முன்பாக ஆஜரானார். அப்போது முதல்வர் ஜெயலலிதா ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ., தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சசிகலா, இளவரசி ஆகியோர் ஆஜரானது பதிவு செய்து கொள்ளப்பட்டது.