டி.எஸ்.பி.,யை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி 'சஸ்பெண்ட்'
டி.எஸ்.பி.,யை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி 'சஸ்பெண்ட்'
ADDED : டிச 12, 2025 05:16 AM

சென்னை: காஞ்சிபுரம் டி.எஸ்.பி.,யை கைது செய்ய உத்தரவு பிறப்பித்த, மாவட்ட நீதிபதி பா.உ.செம்மல், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பான உத்தரவை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பிறப்பித்துள்ளார்.
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை கைது செய்ய தவறியதற்காக, காஞ்சிபுரம் மாவட்ட டி.எஸ்.பி., சங்கர் கணேசை சிறையில் அடைக்க, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து, காஞ்சிபுரம் எஸ்.பி., - டி.எஸ்.பி., சங்கர் கணேஷ் மற்றும் வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சங்கர் கணேசை உடனே விடுதலை செய்ய உத்தரவிட்டு, மாவட்ட நீதிபதி உத்தரவையும் ரத்து செய்தது.
மேலும், சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதி, தொடர்ந்து அதே இடத்தில் பணிபுரிவது உகந்ததாக இருக்காது என்பதால், அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க, பணியிட மாற்றக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதையடுத்து, முன்பகை விவகாரத்தில், காஞ்சிபுரம் டி.எஸ்.பி.,யை கைது செய்ய உத்தரவிட்ட, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல், கடந்த அக்டோபரில், அரியலுார் மாவட்ட லோக் அதாலத் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
தற்போது, ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு பின், மாவட்ட நீதிபதி செம்மல், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

