தமிழிசையுடன் கமல் கட்சி 'டிஷ்யூம்'; பட்டம் துறந்த விவகாரத்தில் மாறி மாறி விமர்சனம்!
தமிழிசையுடன் கமல் கட்சி 'டிஷ்யூம்'; பட்டம் துறந்த விவகாரத்தில் மாறி மாறி விமர்சனம்!
ADDED : நவ 14, 2024 12:38 PM

சென்னை: தி.மு.க., மிரட்டலால் தான் கமல் பட்டத்தை துறந்தார் என்று கூறிய பா.ஜ., தலைவர் தமிழிசைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி பதில் அளித்துள்ளது.
சமீபத்தில், 'உலக நாயகன்' பட்டத்தை துறந்தார் நடிகர் கமல். 'இனி தன்னை கமல் அல்லது கமல்ஹாசன் என்றே அழைக்க வேண்டும்' என அறிவித்தார். 'ஆளும் தி.மு.க.,வின் மிரட்டலால் தான் கமல்ஹாசன் தன் பட்டத்தை துறந்துள்ளார்' என பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை விமர்சித்து இருந்தார். இதற்கு பதில் அளித்து, இன்று (நவ.,14) மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ.,வில் கேட்பாரற்று இருக்கும் தமிழிசை கமல் தனக்கு அளிக்கப்பட்ட உலகநாயகன் என்ற பட்டத்தை தவிர்க்கும் படி வெளியிட்ட அறிக்கையை அரைவேக்காட்டுத்தனமாக விமர்சித்துள்ளார்.
தேர்தலில் நின்று எம்.பி., ஆகி மத்திய அமைச்சராகி விடலாம் என்ற கனவில், இருந்த கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை; தன் வாழ்க்கையையே சரியாக கணிக்க முடியாதவர்; கமல் செயல்பாட்டை கணிக்க முயன்றுள்ளார். கமல், உலக நாயகன் பட்டத்தை துறந்தது தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கலைத்துறையில் முழுமை பெற்ற ஞானத்தின் வெளிப்பாடு.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல என்பதை தமிழிசை புரிந்து கொள்ள வேண்டும். அது சாதித்த மனிதனின் பக்குவத்தின் வெளிப்பாடு. இதை புரிந்து கொள்ளும் பக்குவம் தமிழிசைக்கு இல்லை என்பது வருத்தத்திற்குரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.