ADDED : ஏப் 16, 2025 09:52 PM
சென்னை:சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேற்று, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் சந்தித்துப் பேசினார். அப்போது, துணை முதல்வர் உதயநிதி, மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மவுரியா, பொதுச்செயலர் அருணாச்சலம் ஆகியோர் உடனிருந்தனர்.
இது தொடர்பாக, கமல் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரை சந்தித்தேன். உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, கவர்னருக்கு தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரம் கிடையாது எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை பெற்றதற்காக, முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
மாநிலங்களின் உரிமையைக் காப்பதிலும், மாநில சுயாட்சியை வலியுறுத்துவதிலும், ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பதிலும், ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியனாகத் திகழ்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவரைக் கொண்டாட வேண்டியது என் கடமை; நம் கடமை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைந்த ம.நீ.ம.,வுக்கு, ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்படும் என அறிவிக்கப்ட்டது. வரும் ஜூலையில் ராஜ்யசபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அது தொடர்பாகவும் முதல்வருடன் கமல் பேசியதாக கூறப்படுகிறது.