திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் ஏற்றப்பட்டது கார்த்திகை மஹா தீபம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் ஏற்றப்பட்டது கார்த்திகை மஹா தீபம்
ADDED : டிச 03, 2025 06:01 PM

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று(டிச.,03) 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் ' அண்ணாமலையாருக்கு அரோகரா ' என பக்தி பரவசத்துடன் கண்டு வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கடந்த, 24ல் தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று 3ம் தேதி, முக்கிய விழாவான பஞ்ச பூதங்கள், 'ஏகன் - அனேகன்' என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
பிறகு 'அனேகன் - ஏகன்' என்பதை விளக்கும் வகையில், மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்பட்டது.
முன்னதாக, மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை இன்று, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் மஹா தீபம் ஏற்ற, 4,500 கிலோ நெய் மற்றும், 1,150 மீட்டர் காடா துணியால் ஆன திரி தயார் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டன.
விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னிதி முழுதும், பல்வேறு வண்ணங்களில், ரோஜா, சாமந்தி, பூக்களால் தோரணங்கள் கட்டி, அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், கோயில் வளாகம் முழுதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

