UPDATED : பிப் 22, 2025 02:51 PM
ADDED : பிப் 22, 2025 02:47 PM

பந்தலூர்: கேரளா மாநிலத்தின் நக்சல் இயக்கத்தின் கடைசி தலைவராக செயல்பட்ட, சந்தோஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே ஆழியாறு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் வீட்டை விட்டு வெளியேறி, நக்சல் இயக்கத்தில் சேர்ந்து செயலாற்றி வந்தார்.
அண்மையில் கைது செய்யப்பட்ட நக்சல் இயக்க தலைவர்களான சி.பி. மொய்தீன், சோமன் ஆகியவர்களுடன், நெருங்கிய நபராக இருந்ததுடன், கேரளாவின் கபினி தள நக்சல் இயக்க தலைவராக செயல்பட்டு வந்தார்.
வயநாடு மாவட்டம் தலப்புழா பகுதியில், கன்னி வெடிகள் வைத்த சம்பவம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட தமிழகம் மற்றும் கேரளாவில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் நக்சல் இயக்கத்தின் அனைத்து தலைவர்களும், கைது செய்யப்பட்ட நிலையில் சந்தோஷ் தமிழகத்திற்குள் இடம்பெயர்ந்துள்ளதாக, கேரளாவின் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து கேரளா மாநில நக்சல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், தமிழக உளவுத்துறை போலீசார் இணைந்து நக்சல் சந்தோஷ் நடவடிக்கைகள் குறித்து, தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.இந்நிலையில் நேற்று, தமிழகத்தின் ஓசூர் பகுதியில் மறைந்திருந்த நக்சல் சந்தோஷை தமிழக போலீசார் உதவியுடன் கேரள மாநில நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவனை கேரளாவுக்கு அழைத்து வந்தனர். பின்னர், இன்று (பிப்.,22) மதியம் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விரைவில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேசிய புலனாய்வுத்துறை போலீசாரும் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் கேரளா மாநிலத்தில் முகாமிட்டிருந்த, நக்சல்களின் கடைசி தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

