பசுமை தீர்ப்பாயம் உத்தரவுக்கு பணிந்தது கேரளா; மருத்துவ கழிவுகளை லாரிகளில் கேரளாவிற்கு அனுப்பி வைப்பு
பசுமை தீர்ப்பாயம் உத்தரவுக்கு பணிந்தது கேரளா; மருத்துவ கழிவுகளை லாரிகளில் கேரளாவிற்கு அனுப்பி வைப்பு
UPDATED : டிச 22, 2024 06:37 PM
ADDED : டிச 22, 2024 09:28 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுபடி மீண்டும் தங்கள் மாநிலத்துக்கே கொண்டு செல்வதற்காக, கேரள அதிகாரிகள் லாரிகளுடன் வந்தனர். கழிவுகளை நான்கு இடங்களில் லாரிகளில் ஜே.சி.பி., மூலம் ஏற்றி, கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்ற இரண்டு இடங்களில் விரைவில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கேரளத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன என குற்றச்சாட்டுகள் எழுந்தது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.
தமிழக அரசு வழக்கறிஞர், 'கேரளத்திலிருந்து லாரிகளில் கொண்டு வந்து, தமிழகத்தில் கொட்டப்படும் உயிரி மருத்துவக் கழிவுகளை அகற்றும் செலவுகளை, கேரள அரசு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட வேண்டும்' என தெரிவித்தனர். 'திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும். கேரளா அரசே பொறுப்பேற்று 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்' என பசுமை தீர்ப்பாயம் கெடு விதித்தது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுபடி மீண்டும் தங்கள் மாநிலத்துக்கே கொண்டு செல்வதற்காக, கேரள அதிகாரிகள் லாரிகளுடன் வந்துள்ளனர். மருத்துவ கழிவுகளை 11 லாரிகளில் ஏற்றப்பட்டு மீண்டும் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. நான்கு இடங்களில் கழிவுகள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. அவை கீழே விழாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு லாரிகள் மூடப்பட்டுள்ளன. மற்ற இரண்டு இடங்களில் குப்பைகள் அகற்றி முடிக்கும் பணி ஓரிரு மணி நேரத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவக் கழிவு கொட்டப்பட்ட இடத்தில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.