sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிறுநீரக முறைகேடு :விசாரணை குழுவிற்கான அதிகாரிகள் நியமன விவகாரம் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்

/

சிறுநீரக முறைகேடு :விசாரணை குழுவிற்கான அதிகாரிகள் நியமன விவகாரம் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்

சிறுநீரக முறைகேடு :விசாரணை குழுவிற்கான அதிகாரிகள் நியமன விவகாரம் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்

சிறுநீரக முறைகேடு :விசாரணை குழுவிற்கான அதிகாரிகள் நியமன விவகாரம் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்


ADDED : அக் 10, 2025 10:11 PM

Google News

ADDED : அக் 10, 2025 10:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுநீரக முறைகேடு விவகாரம் தொடர்பாக, தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில், ஏழை தொழிலாளர்களை ஏமாற்றி புரோக்கர்கள் மூலமாக, சிறுநீரகம் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. போலி ஆவணங்கள் தயார் செய்து, லட்சக்கணக்கான ரூபாய்க்கு தொழிலாளிகளிடம் சிறுநீரகங்களை வற்புறுத்தி பெற்று, விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

திருச்சி, பெரம்பலுார் உள்ளிட்ட மாவட்டங்களிலும், சிறுநீரக திருட்டுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதில், தொடர்புடைய இரண்டு மருத்துவமனைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.

'இந்த இரண்டு மருத்துவமனைகளும், தி.மு.க., ஆதரவாளர்களால் நடத்தப்படுகின்றன. அதனால், இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடக்க வாய்ப்பில்லை. எனவே சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்' எனக்கோரி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்தியேஸ்வரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்ததுடன், அதில், நீலகிரி, திருநெல்வேலி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த எஸ்.பி.,க்களையும் சேர்த்து உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை குழு அமைத்ததில், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், விசாரணை குழுவில் இடம் பெற உள்ள அதிகாரிகளை நாங்கள் தான் தேர்ந்தெடுப்போம் என்று உயர் நீதிமன்ற பதிவாளர் கூறுகிறார்.

'சம்பவம் நடந்த மாவட்டத்தில் இருந்து, வெகு துாரத்தில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதன் மூலமாக நிர்வாக ரீதியான சிக்கல்கள் ஏற்படும். எனவே நாங்களே, 10 அதிகாரிகளின் பெயர்களை பரிந்துரை செய்கிறோம். அதிலிருந்து சில அதிகாரிகளை தேர்ந்தெடுத்து நியமிக்கலாம்' என, வாதங்களை முன் வைத்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மட்டும், ஏன் இத்தனை மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்திற்கு வருகின்றன. குற்ற சம்பவம் நடந்த மாவட்டத்திற்கு அருகே உள்ள அதிகாரிகளை விசாரணை குழுவில் இணைக்க வேண்டும் என்ற, தமிழக அரசின் யோசனையை எங்களால் ஏற்க முடியாது.

இந்த விவகாரத்தை பொறுத்தவரை, சி.பி.ஐ., விசாரணை தான் முதலில் கேட்கப்பட்டது. ஆனால், பல்வேறு விஷயங்களையும் ஆராய்ந்து தான் சென்னை உயர் நீதிமன்றம் சரியான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழக அரசின் வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தனர்.

'அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றங்கள் பாடம் கற்பிப்பு'

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை: தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான மருத்துவமனையுடன் தொடர்புடைய, கிட்னி திருட்டு குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் அமைக்க கூறிய சிறப்பு புலனாய்வு குழுவில், தாங்கள் பரிந்துரைக்கும் அதிகாரிகளையே நியமிக்க வேண்டும் என்ற, தி.மு.க., அரசின் நிபந்தனையை ஏற்க மறுத்து, உயர் நீதிமன்ற தீர்ப்பில் தலையிட, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றிய, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தை அணுகிய தி.மு.க.,வுக்கு, அதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தடை செய்ய, உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. கரூர் த.வெ.க., பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து, சி.பி.ஐ., விசாரணை கோரிய வழக்கில், தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. ஒரே நாளில் டில்லி முதல் மதுரை வரை, தி.மு.க.,வின் மனசாட்சியை விட வேகமாக நீதியும், தர்மமும், தி.மு.க.,வை துரத்திக் கொண்டிருக்கின்றன. தி.மு.க., அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும், நீதிமன்றங்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



- டில்லி சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us