காங்., செல்வப்பெருந்தகை வளரவில்லை: வி.சி., விமர்சனம்
காங்., செல்வப்பெருந்தகை வளரவில்லை: வி.சி., விமர்சனம்
ADDED : பிப் 11, 2026 07:48 AM

சென்னை: 'திருமாவளவனுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு, செல்வப்பெருந்தகை வளரவில்லை' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலர் வன்னியரசு விமர்சித்துள்ளார்.
கடந்த 8ம் தேதி பேட்டியளித்த, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ' ராமதாஸ் வி.சி., கொடியை ஏற்றியுள்ளார். வன்னியர் சங்கக் கொடியை திருமாவளவன் ஏற்றியுள்ளார். தேவை என்றால் ஒருவரையொருவர் சந்தித்து பேசி, சரிசெய்து விடுவர்,' என்றார்.
இதற்கு, வி.சி., துணைப் பொதுச்செயலர் வன்னியரசு, பதிலளித்து கூறியதாவது:
காங்.,கில் நிறைய குளறுபடிகள், முரண்பாடுகள், கோஷ்டி பிரச்னைகளும் உள்ளன. சொந்தக் கட்சி பிரச்னையை தீர்க்க முயன்றால், கட்சிக்கு நல்லது. மாறாக, மற்ற கட்சிகளுக்கு மீடியேட்டராக மாறுவது செல்வப்பெருந்தகைக்கு நல்லதல்ல.
அரசியல் ஆதாயத்திற்காக, விளம்பர நோக்கத்துடன் அவர் செயல்படுகிறார். திருமாவளவனுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு, செல்வப்பெருந்தகை வளரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

