வீட்டு மனைகளின் நில வகைப்பாடு மாறாததால் பத்திரப்பதிவில் பிரச்னை: சரிசெய்ய தயாராகிறது வருவாய் துறை
வீட்டு மனைகளின் நில வகைப்பாடு மாறாததால் பத்திரப்பதிவில் பிரச்னை: சரிசெய்ய தயாராகிறது வருவாய் துறை
ADDED : நவ 24, 2025 04:43 AM

சென்னை: 'அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளின் பட்டாக்களில், நில வகைப்பாடு நஞ்சை, புஞ்சை என இருப்பதை மாற்ற நடவடிக்கை எடுப்பட உள்ளது' என, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகள் விற்பனைக்கு, 2016ல் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, முறையான அங்கீகாரத்துடன் மனைகளை விற்க, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
புகார் இதன்பேரில், நகர், ஊரமைப்பு சட்டப்படி முறையான அங்கீகாரம் பெற்று, ரியல் எஸ்டேட் ஆணையத் தில் பதிவு செய்து, மனை கள் விற்பனை மேற் கொள்ளப்படுகின்றன.
இதில், மனைப்பிரிவுக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்பட்டாலும், வருவாய் துறை நில ஆவணங்களில், வகைப் பாட்டை மாற்றுவதில்லை.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 'டவுன் சர்வே' மேற்கொள்ளப்பட்ட நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே, நிலங்கள் வீட்டு மனைகளாக வருவாய் ஆவணங்களில் குறிப்பிடப்படுகின்றன.
பிற பகுதிகளில், பட்டாக்களில் நில வகைப்பாடானது, நஞ்சை அல்லது புஞ்சை என்றே குறிப்பிடப்படுகிறது.
பதிவுத்துறை சட்டத்தின் 22 ஏ பிரிவின்படி, அங்கீகாரமில்லாத மனைகளை பதிவு செய்யக்கூடாது.
இதில், நகர், ஊரமைப்பு சட்டப்படி அங்கீகாரம் இருந்தாலும், பட்டாவில் சம்பந்தப்பட்ட நிலம் நஞ்சை அல்லது புஞ்சையாக இருப்பதால், அந்த பத்திரங்களை பதிவு செய்வதில் பிரச்னை ஏற்படுகிறது.
மனை அங்கீகாரத்துக்கான ஆவணங்கள் சரியாக இருந்தாலும், சில இடங்களில் சார் - பதிவாளர்கள், பட்டாவில் விவசாய நிலமாக இருக்கிறது எனக்கூறி பதிவு செய்ய மறுக்கின்றனர்.
அப்படியே சார் - பதிவாளர்கள் பதிவு செய்தாலும், தணிக்கையின் போது இது மோசடி என குறிப்பு எழுதப்படுகிறது.
இதனால், சார் - பதிவாளர்களும், பொது மக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பதிவுத்துறை அதிகாரிகள், வருவாய் துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
திருத்தம் இதுகுறித்து, வருவாய் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
பட்டா போன்ற ஆவணங்களில் நில வகைப்பாட்டை குறிப்பிடுவதற்கு, வருவாய் துறைக்கு என வழிமுறைகள் உள்ளன. அதன்படி, டவுன் சர்வே நடந்த பகுதிகளில் மட்டுமே, நிலங்கள் வீட்டு மனைகளாக குறிப்பிடப்படுகின்றன.
பிற இடங்களில், முறையான அங்கீகாரத்துடன் உள்ள வீட்டு மனைகளை உரிய வகைப்பாட்டில் குறிப்பிட, விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்.
பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதன் அடிப்படையில், வருவாய் துறையில் உயரதிகாரிகள் நிலையில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
டவுன் சர்வே நடக்காத பகுதிகளில், குடியிருப்பு பட்டாக்களில் குறிப்பிட வேண்டிய நில வகைப்பாட்டு விபரங்கள் குறித்த உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

