சோழவந்தான் எம்.எல்.ஏ., உட்பட ஏழு பேர் மீது நில மோசடி வழக்கு
சோழவந்தான் எம்.எல்.ஏ., உட்பட ஏழு பேர் மீது நில மோசடி வழக்கு
ADDED : ஜூலை 24, 2011 03:04 AM
மதுரை : போலி ஆவணம் தயாரித்து, ஆள் மாறாட்டம் செய்து 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக, மதுரை சோழவந்தான் தனித் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கருப்பையா உட்பட ஏழு பேர் மீது, ஜாமினில் வெளிவர முடியாத, ஏழு பிரிவுகளின் கீழ், மாவட்ட குற்றப் பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.
சென்னை சூளைமேடு, அமீர்கான் தெருவை சேர்ந்த வெள்ளையப்ப நாடார் மனைவி ராஜேஸ்வரி (எ) மீனாம்பாள், 64. இவருக்கு சொந்தமான நான்கு ஏக்கர் 20 சென்ட் நிலம், மதுரை வாவிட மருதூரில் உள்ளது. அதில் விவசாயம் செய்து கொள்ள, முத்துசேர்வை மனைவி சின்னம்மாளுக்கு, அனுமதி வழங்கினர்.
இந்த நிலத்திற்கு, 2003, நவ., 24ல் வாவிடமருதூர் ஹரிஹரன் பவர் ஏஜன்ட்டாக இருந்து, கிருஷ்ணாபுரம் காலனி கண்ணனுக்கு ஒன்பது சென்ட், திருமங்கலம் கற்பகநகர் ஜெயசந்திரனுக்கு, 45 சென்ட் நிலத்தை விற்றார். மீதமுள்ள 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கருப்பையா, வாவிடமருதூர் சடாட்சரம், தமிழன் ஆகியோர் தூண்டுதல்படி, ஹரிஹரன் தனது பெயருக்கு அலங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் செய்து கொண்டதாகவும், அதற்காக பெண் ஒருவரை ஆள் மாறாட்டம் செய்ய வைத்து, ராஜேஸ்வரி போல் கையெழுத்திட்டு, விரல் ரேகையை பதிவு செய்ததாகவும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ராஜேஸ்வரி புகார் கூறினார்.
ஹரிஹரன், கண்ணன், ஜெயசந்திரன், கருப்பையா, சடாட்சரம், தமிழன் மற்றும் பெண் மீது மோசடி, ஆள் மாறாட்டம் உட்பட ஜாமினில் வெளிவர முடியாத ஏழு பிரிவுகளின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால்அழகு வழக்கு பதிவு செய்தார். முன் ஜாமின் பெற முயற்சி: கருப்பையாவை போலீசார் கைது செய்ய வாய்ப்புள்ளது. எனவே, வழக்கை சட்டப்படி சந்திப்பதற்கு வசதியாக, கோர்ட்டில் முன் ஜாமின் பெற, கருப்பையா முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.