ADDED : செப் 11, 2011 11:34 PM
மதுரை: மதுரையில் அடுத்தவர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ரூ.43.35 லட்சத்திற்கு விற்று மோசடி செய்த வழக்கில் வக்கீல் பாஸ்கரன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் பாத்திமாபீவி என்பவருக்கு வக்கீலாக இருந்தார். பாத்திமா பீவிக்கு உச்சப்பட்டியில் ஒரு ஏக்கர் 47 சென்ட் இடம் உள்ளது. இதை முனியாண்டி, சுப்பையா என்பவர்களுக்கு பாத்திமா பீவி 'பவர்' எழுதிக் கொடுத்தார். இந்நிலையில் இருவரும் இறந்துவிட, அந்த இடத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்க பாஸ்கரன் திட்டமிட்டார். நிலபுரோக்கர்கள் ஆஸ்டின்பட்டி பெரியராமன், அரசப்பட்டி சங்கு, 56 ஆகியோரை முனியாண்டி, சுப்பையாவாக ஆள் மாறாட்டம் செய்து, 2006ல் மதுரை கென்னட் கிராஸ் ரோட்டைச் சேர்ந்த காசிநாதனுக்கு,70, ரூ.48.35 லட்சத்திற்கு பாஸ்கரன் விற்றார்.
பின், 2009ல் இந்த இடத்தை பிளாட் போட்டு விற்க காசிநாதன் முயன்றபோது, சுரேஷ் என்பவர் தனது பெயருக்கு
ஏற்கனவே கிரையம் செய்த விபரத்தை தெரிவித்தார். இதுகுறித்து பாஸ்கரனிடம் கேட்க, அவரும் உண்மை என ஒப்புக்கொண்டார். வாங்கிய பணத்தை ஆறு தவணைகளாக செலுத்திவிடுகிறேன் என்ற பாஸ்கரன், முதற்கட்டமாக ரூ.15 லட்சம் தந்தார். பின், பணம் தராததாலும், ஆள் மாறாட்டம் செய்ததற்காகவும் பாஸ்கரன் மற்றும் பெரியராமன், சங்குவை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் திருமால்அழகு கைது செய்தார்.