வாடகை வீட்டில் ரகசியக் கேமராக்கள் வீட்டு உரிமையாளர் மகன் சிக்கினார்
வாடகை வீட்டில் ரகசியக் கேமராக்கள் வீட்டு உரிமையாளர் மகன் சிக்கினார்
ADDED : செப் 24, 2024 06:56 PM
புதுடில்லி:வாடகை வீட்டின் படுக்கை அறை, குளியல் அறை ஆகியவற்றில் ரகசியக் கேமராக்களைப் பொருத்தியிருந்த வீட்டு உரிமையாளர் மகன் கைது செய்யப்பட்டார்.
கிழக்கு டில்லி ஷகர்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த இளம்பெண், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.
வெளியூர் செல்லும்போது வீட்டுச் சாவியை, வீட்டு உரிமையாளர் மகன் கரண்,30, என்பவரிடம் கொடுத்து விட்டுச் செல்வார்.
சமீபநாட்களாக தன் 'வாட்ஸாப்' செயலியில் சில அசாதாரண நடவடிக்கைகள் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்தார். தன் வாட்ஸாப் செயலியுடன் இணைக்கப்பட்ட பிற சாதனங்கள் குறித்து ஆராய்ந்தார். அவரது வாட்ஸாப் கணக்கு வேறு ஒரு லேப்டாப் வழியாக கண்காணிக்கப்படுவதைக் கண்காணித்தார். இதையடுத்து, அந்த லேப்டாப் இணைப்பைத் துண்டித்தார்.
வீடு முழுதும் ஆய்வு செய்ததில், குளியலறை பல்ப் ஹோல்டரில் ரகசியக் கேமரா பொருத்தப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தார். இதையடுத்து, போலீசில் புகார் செய்தார். போலீஸ் குழு வீடு முழுதும் சல்லடை போட்டு அலசியது. படுக்கை அறை பல்ப் ஹோல்டரிலும் ரகசியக் கேமரா பொருத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வெளியூர் செல்லும்போதெல்லாம் அதே கட்டடத்தில் மற்றொரு தளத்தில் வசிக்கும் வீட்டு உரிமையாளர் மகன் கரணிடம் சாவியைக் கொடுத்து விட்டுச் செல்வதை போலீசாரிடம் கூறினார்.
விசாரணையில், மூன்று மாதங்களுக்கு முன் ரகசியக் கேமராக்களை படுக்கையறை மற்றும் குளியலறையில் பொருத்தியதை ஒப்புக் கொண்டார். பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை சேமித்து வைத்த இரண்டு லேப்-டாப்களை அவரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட கரண், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மற்றுத் திறனாளியும், பட்டதாரியுமான கரண், 7 ஆண்டுகளாக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதி வருகிறார்.