மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜன 12, 2026 01:33 PM

சென்னை: மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த அயலக தமிழர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நாம் எல்லோரும் யாராலும் பிரிக்க முடியாத தமிழ் சொந்தங்கள், தமிழினச் சொந்தங்கள். இது பல்லாயிரமாண்டு கால சொந்தம், இன்னும் பல பல ஆண்டுகள் தொடரக்கூடிய சொந்தம். நாடுகளும், கடல்களும் நம்மை பிரித்தாலும், மொழியும் இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது. தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கு நன்மை செய்வது போலவே அயல் நாட்டு தமிழர்களிடமும் சகோதர உணர்வுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
அதன் எடுத்துக்காட்டாக அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஓய்வில்லாமல் உழைத்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் 105 முகாம்களின் வாழும் இலங்கை தமிழர்களுக்காக 7469 வீடுகள் கட்டித்தர திட்டமிடப்பட்டு படிப்படியாக செயல்படுத்தி வருகிறோம். வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக கட்டணமில்லா உதவி மையம் தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழ் வேர்களை தேடி பயணம் மூலமாக அயலகத் தமிழர்களை தமிழகத்திற்கு அழைத்து வருகிறோம்.
திராவிட மாடல் ஆட்சியில் அயலகத் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டு, ஜன.12-ஐ அயலகத் தமிழர் நாளாக கொண்டாடி வருகிறோம். தமிழால் இணைவோம்; உலகெங்கும் தமிழ்; தமிழ் வெல்லும் என்ற கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் உக்ரைன், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து 2,300க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்டு கொண்டு வந்திருக்கிறோம். தமிழகத்தின் மட்டும் இல்லாமல், வெளிநாடுகளிலும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல திட்டங்களை வகுத்து வருகிறோம்.
தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை செயல்படுத்தி வருகிறோம். புலம்பெயர்ந்த மண்ணில் தமிழுக்காக பாடுபடும் தமிழ் சங்கங்களுக்கு விருதுகள் வழங்கி அங்கீகரிக்கிறோம். தமிழக அரசின் சார்பில் அயலகத் தமிழர்களின் பன்முகத்தன்மையுடன் விளங்கக்கூடியவர்களை தேர்ந்தெடுத்து, 'தமிழ் மாமணி' விருதும், பட்டயமும் வழங்கி வருகிறோம். மொழி சிதைந்தால் இனம் சிதையும், இனம் சிதைந்தால் அடையாளம் போய்விடும். அடையாளம் போய்விட்டால் தமிழர்கள் எனச் சொல்லும் தகுதியை இழந்துவிடுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

