கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை சட்டப்போராட்டம் தொடரும்; ஓய மாட்டோம் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை சட்டப்போராட்டம் தொடரும்; ஓய மாட்டோம் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
ADDED : நவ 21, 2025 11:56 PM

சென்னை: 'நீதிமன்றம் கதவுகளை அடைப்பது, மக்களாட்சியை சிறுமைப்படுத்தி விடும். அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படும் கவர்னர்களை, அது ஊக்குவிக்கும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் போராட்டம் தொடரும். சட்ட முன்வடிவுகள் மீது முடிவெடுக்க, கவர்னருக்கு காலக்கெடு விதிக்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை ஓய மாட்டோம்.
அதிகார மையங்கள் ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் அளித்த விளக்கங்கள், கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் பெற்ற தீர்ப்பின் மீது, எந்த தாக்கத்தையும் செலுத்தாது. மாநிலத்தில், இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது.
'அரசியலமைப்புப் பதவியில் இருப்போர், அரசியல் அமைப்பை மீறிச் செயல்பட முடியாது. மசோதாக்களின் மீது முடிவெடுக்காமல், காலவரையின்றி கவர்னர் தாமதம் செய்ய இயலாது.
'எந்த விளக்கமும் இல்லாமல் நீண்ட காலம் இழுத்தடித்தால், மாநிலங்கள் நீதிமன்றங்களை அணுகலாம்.
'கவர்னர்கள் வேண்டுமென்றே தாமதிப்பதற்கு எதிராக வழக்கு தொடுத்து, கேள்விக்குட்படுத்தி, நியாயம் பெறலாம்' என்பதை, தன் விளக்கத்தில் உச்ச நீதிமன்ற அமர்வு மீண்டும் ஒருமுறை உறுதிப் படுத்தி உள்ளது.
'காலவரையின்றி காலம் தாழ்த்தலாம்; சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் மறுக்கலாம்' என்ற, தமிழக கவர்னரின் கூற்றை, உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை நிராகரித்து உள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள், மக்களின் விருப்பத்தை சட்டமாக நிறைவேற்றினால், ஒப்புதல் அளிக்காமல், வேண்டுமென்றே காலம் கடத்தினால், நீதிமன்றங்களில் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை, சட்டப் போராட்டத்தின் வாயிலாக கட்டாயமாக்கி உள்ளோம்.
அரசியல் சட்டப்பிரிவு 361க்கு பின்னால், கவர்னர்கள் ஒளிந்து கொள்ள முடியாது என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறோம். 'அரசியல் சட்டத்தால் அமைந்த எந்தப் பதவியும், அந்த சட்டத்துக்கு அப்பாற்பட்டதில்லை' என, நான் திடமாக நம்புகிறேன்.
ஒரே நம்பிக்கை உயர்ந்த அரசியலமைப்புப் பதவிகளில் இருப்பவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தை மீறி நடந்தாலும், நீதிமன்றங்கள்தான் ஒரே நம்பிக்கை. எனவே, நீதிமன்றங்களின் கதவு, திறந்தே இருக்க வேண்டும்.
அது தனது கதவுகளை அடைத்தால், மக்களாட்சியில், சட்டத்தின் ஆட்சியை சிறுமைப் படுத்தி விடும். அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படும் கவர்னர்கள், அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொள்வதை, அது ஊக்குவிக்கும். தமிழக மக்களின் விருப்பத்தைச் சட்டங்களின் வாயிலாக நிறைவேற்ற தொடர்ந்து உழைப்போம் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

