இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் பொறுமையுடன் இருப்போம்: கவர்னர்
இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் பொறுமையுடன் இருப்போம்: கவர்னர்
ADDED : நவ 30, 2024 09:35 PM

சென்னை: ''இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் இருப்போம்,'' என கவர்னர் ரவி கூறியுள்ளார்.
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையை கடந்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. புயல் காரணமாக பலத்த காற்று வீசி வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பெஞ்சல் புயலுடன் பெய்து வரும் கன மழையால் தமிழக வட கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நமது மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த இக்கட்டான நேரத்தில், நமது மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், முற்றிலும் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
அதிகாரிகள் வழங்கும் அறிவுரைகளை தயவு செய்து பின்பற்றவும். இந்த அவசரநிலையைச் சமாளிக்க மத்திய, மாநில அமைப்புகள் அயராது உழைத்து வருகின்றன. சில தன்னார்வ தொண்டு அமைப்புகளும் மக்களின் துயரங்களைக் குறைக்க தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றன. இந்த இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் இருப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் கவர்னர் கூறியுள்ளார்.

