'கனிமொழி கருத்துக்காக தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுவோம்'
'கனிமொழி கருத்துக்காக தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுவோம்'
ADDED : ஏப் 13, 2025 03:05 AM

நாமக்கல்: ''வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,-எம்.பி., கனிமொழிக்கு தக்க பாடம் புகட்டப்படும்; பழனிசாமி, தமிழக முதல்வர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட எருமைப்பட்டியில், நேற்று தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது.
இதில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி, கட்சியினருடன் வீதி வீதியாக சென்று, தி.மு.க., அரசின் அவல நிலையை எடுத்துக்கூறி, துண்டு பிரசுரம் வழங்கி, அ.தி.மு.க.,விற்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது, அவர் அளித்த பேட்டி:
தி.மு.க., ஆட்சியின் அவலநிலை குறித்து, தேர்தல் நடக்கும் வரை திண்ணை பிரசாரம் நடத்தப்படும். அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை, தமிழகம் முழுதும் வரவேற்றுஉள்ளனர்.
'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்தது குறித்து, தி.மு.க., - எம்.பி., கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். வரும், 2026 சட்டசபை தேர்தலில், கனிமொழியின் கருத்துக்காகவே, தி.மு.க.,வுக்கு தக்க பாடம் புகட்டப்படும். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக முதல்வர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
இவ்வாறு தங்கமணி கூறினார்.

