ADDED : மார் 19, 2024 11:09 PM
சென்னை:'லோக்சபா தேர்தலில், 'ஒன்றுபட்டு நிற்போம்; வென்று காட்டியே தீருவோம்' என, கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
நாட்டின் பன்முகத்தன்மையை காக்கவும், அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும், இண்டியா கூட்டணியை லோக்பா தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த ஒரே இலக்குடன் தி.மு.க.,வுடன் இணைந்து நிற்கும் கூட்டணி கட்சியினரை வரவேற்கிறேன். கடந்த, 10 ஆண்டுகளாக, பா.ஜ., அரசின் மக்கள் விரோத, மாநில உரிமைகளை பறித்த ஆட்சியை விரட்ட வேண்டும்.
அதற்கு லோக்சா தேர்தல் களமே சரியான வாய்ப்பு என்கிற உறுதியான நம்பிக்கையுடன், இண்டியா கூட்டணியில், தி.மு.க.,வுக்கு தோள் கொடுக்கும் கூட்டணி கட்சிகளுடன் களத்தை சந்திக்கிறோம்.
கடந்த 2019ம் ஆண்டின் லோக்சபா தேர்தலுக்கு முன், கூட்டணி கட்சியினருடன் ஏற்பட்ட கொள்கை உறவு, தேர்தல் கூட்டணியாக இணைந்து தேர்தல் களம் சந்தித்தோம்.
கடந்த 2021ல் சட்டசபை தேர்தல் களம், ஊரக உள்ளாட்சி தேர்தல் களம், மாநகராட்சி, நகராட்சி தேர்தல் களம் என, அனைத்திலும் தொடர் வெற்றி பெற்று வருகிறோம்.
கொள்கை அடிப்படையிலான வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ள கூட்டணி கட்சியினருக்கு, உரிய தொகுதி பங்கீடுகளை செய்யும் ஜனநாயகப் பூர்வ நடைமுறையை தி.மு.க., கடைப்பிடித்து வருகிறது. பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் இந்த பயணத்தில் ஒரு சில கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது உண்மையில் எனக்கும் வருத்தம் தருகிறது.
தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையையும், கூட்டணியின் வலிமையையும் கருத்தில் கொண்டு இதுகுறித்து அனைத்து கூட்டணி கட்சிகளிடம் விளக்கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத கூட்டணி கட்சியினரும் உணர்ந்து, ஆதரவு நல்கி, தேர்தல் பணியாற்ற முடிவெடுத்திருப்பது ஜனநாயக பண்பை காட்டுகிறது.
மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும் தொகுதிப் பங்கீட்டில் இடம் ஒதுக்க இயலாமல் போன நிலையிலும், மதவெறி பாசிசத்தை வீழ்த்திட தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதை வரவேற்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

