இறக்குமதி ஆயுர்வேத மருந்துக்கு உரிமம் கட்டாயம்: ஐகோர்ட்
இறக்குமதி ஆயுர்வேத மருந்துக்கு உரிமம் கட்டாயம்: ஐகோர்ட்
ADDED : ஜூலை 05, 2025 10:30 PM
சென்னை:'வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் ஆயுர்வேத மருந்துகளுக்கும் கட்டாயம் உரிமம் பெற வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த 'லியுங் காய் புக் மெடிக்கல் கம்பெனி' கோடாரி தைலத்தை தயாரித்து வருகிறது. இந்த தைலத்தை, சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த 'ஆக் ஷன் மார்க்கெட்டிங் இந்தியா' நிறுவனம் இறக்குமதி செய்து விற்கிறது.
இறக்குமதி செய்யப்படும் கோடாரி தைலத்துக்கு உரிமம் பெற வேண்டும் என, ஆக் ஷன் நிறுவனத்திற்கு, அரும்பாக்கத்தில் உள்ள மாநில சான்றிதழ் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பி யது. சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தைலத்தையும் சுங்க அதிகாரிகள் முடக்கினர்.
இதையடுத்து, இறக்குமதி செய்த சரக்கை விடுவிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆக் ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி பிறப்பித்த உத்தரவு:
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கோடாரி தைலம், சுங்க கட்டண வரம்புக்குள் வருவதால், இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகள் சோதனைக்கு உட்பட்டவையே.
மருந்து, மற்றும் ஒப்பனை பொருட்கள் சட்டம், ஆயுர்வேத பொருட்களுக்கும் பொருந்தும். எனவே, அனைத்து மருந்து பொருட்களுக்கும் இறக்குமதி உரிமம் பெற வேண்டும்.
ஆயுர்வேத மருந்துகளுக்கு சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிப்பது தொடர்பான பழைய விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். மனுதாரர் நிறுவனத்தின் பொருட்களை ஆய்வு செய்து விடுவிக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.