'போக்சோ'வில் கைதானவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
'போக்சோ'வில் கைதானவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
ADDED : ஜன 24, 2026 12:47 PM

துாத்துக்குடி: 'போக்சோ' வழக்கில் கைதான முதியவருக்கு இயற்கையாக மரணம் ஏற்படும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
துாத்துக்குடியை சேர்ந்த தங்கபாண்டி, 71, என்ற முதியவர், 2020ல் திருச்செந்துார் பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், அந்த சிறுமியின் பெற்றோரை தங்கபாண்டியின் மகள் வேதசெல்வி, மருமகன் ராஜா ஆகியோர் மிரட்டி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், திருச்செந்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போக்சோ மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்த போலீசார், தங்கபாண்டி உள்ளிட்ட மூவரை யும் கைது செய்தனர். வழக்கின் விசாரணை, துாத்துக்குடி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி பிரீத்தா விசாரித்து, குற்றம்சாட்டப்பட்ட தங்கபாண்டிக்கு இயற்கையாக மரணம் ஏற்படும் வரை ஆயுள் தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
வேதசெல்வி மற்றும் ராஜா ஆகியோருக்கு தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

