எம்.ஜி.ஆரின் புகழ் போல விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!
எம்.ஜி.ஆரின் புகழ் போல விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!
ADDED : ஜன 02, 2024 07:34 AM

வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்:
எல்லாரையும் கவர்ந்த சில நடிகர்களில் விஜயகாந்தும் ஒருவர். திரைத்துறையினர் மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் அன்பையும் பெற்றவர். அரசியலுக்கு அப்பாற்பட்ட பொது மக்களின் அன்பையும், நன் மதிப்பையும் பெற்றவர்.
தன்னை பார்க்க வரும் சாதாரண தொண்டனையும் மதிப்பவர். வீண் பந்தா காட்டாதவர். வெளியூர்களில் இருந்து தொண்டர்கள், பொது மக்கள் என யார் வந்தாலும், அவர்களை சாப்பிட வைத்த பிறகே திருப்பி அனுப்புவார்.
தன் பிறந்த நாளில், விளம்பரம் இல்லாமல் ஏழைகளுக்கு நிறைய நலத்திட்ட உதவிகளை செய்தவர்; தன் கல்லுாரி யில், ஏழை மாணவர்களுக்கு குறைந்த கட்டணம் மற்றும் சலுகைகள் வழங்கியவர்; அரசியலில், பதவிக்காக எதையும் விட்டு கொடுக்கவோ, சமரசம் செய்யவோ, நியாயத்திற்கு புறம்பாக நடக்கவோ, பணிந்து போகவோ அவருக்கு அறவே பிடிக்காது.
துணிச்சலுக்கு பெயர் போன விஜயகாந்த், தன் எதிர்க்கட்சி தலைவர் பதவி போனாலும் பரவாயில்லை என்று, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையே சட்டசபையில் நேருக்கு நேர் எதிர்த்து, காரசாரமாக விவாதம் செய்தவர்.
ஆனால், என்ன தான் விஜயகாந்தின் செயல்பாடுகள் நியாயமாகவும், நேர்மையாகவும் இருந்தாலும், அவரது முன்கோபமே அவருக்கு எதிரியாகி, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டது. பொது வாழ்விற்கு வந்தால் சகிப்புத் தன்மை, பொறுமை, நிதானம் இருந்தால் தான் வளர்ச்சி காண முடியும்.
ஆனால், விஜயகாந்திடம் இந்த குறைபாடுகள் இருந்ததால், வளர்ந்த வேகத்தில் சரிவையும் கண்டார். இதனிடையே துரதிர்ஷ்டவசமாக அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டதால், அரசியல் களத்தில் அவரது செயல்பாடுகள் முற்றிலுமாக நின்று போனது.
'கருப்பு எம்.ஜி.ஆர்., கேப்டன்' என்று அன்புடன் அழைக்கப்பட்ட விஜயகாந்த், இயல்பாகவே நல்ல மனம் கொண்டவர். அதனால் தான் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த, கட்சி பேதமின்றி, அனைத்து கட்சி தலைவர்களும் அணிவகுத்து வந்தனர். தமிழக கவர்னரும், மத்திய அமைச்சரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
எம்.ஜி.ஆரின் புகழ் போல, விஜயகாந்தின் புகழும் தமிழகத்தில் என்றும் நிலைத்திருக்கும்!

