ஊட்டி நகராட்சி கமிஷனருக்கு லஞ்சம் கொடுத்தவர்கள் பட்டியல்!
ஊட்டி நகராட்சி கமிஷனருக்கு லஞ்சம் கொடுத்தவர்கள் பட்டியல்!
ADDED : நவ 12, 2024 06:02 PM

ஊட்டி: ஊட்டி நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் ரூ.11.70 லட்சம் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது; அந்த பணம், யார் யாரிடம் வசூலிக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா பணி காலத்தில் கட்டட புனரமைப்பு பணிக்கு அனுமதி, வளர்ச்சி பணிகளில் அதிக கமிஷன் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 10ம் தேதி ஜஹாங்கீர் பாஷாவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காரில் பின்தொடர்ந்து சென்று கண்காணித்தனர்.
அன்று மாலை ஜஹாங்கீர் பாஷா, அலுவலகம் முடிந்து அரசு காரில் கமிஷனர் 7:00 மணிக்கு வீட்டிற்கு சென்றார். பிறகு அங்கிருந்து ETIOS காரில் கமர்ஷியல் சாலையில் உள்ள சையதீ என்ற உணவகத்திற்கு சென்றார். அங்கு கேஷ் கவுன்டரில் இருந்தவர் கொடுத்த இரண்டு கவர்களை வாங்கி தனது பையில் வைத்துக் கொண்டார்.
அங்கு வெளியே வந்த அவரிடம், டூவிலரில் வந்த ஒருவர் பச்சை நிற கவரை கொடுத்தார். அதனையும் ஜஹாங்கீர் பாஷா வாங்கி வைத்து கொண்டார்.
பிறகு கோத்தகிரி சாலையில், மேல்கோடப்பமந்து தாண்டி டீக்கடை முன் நின்றிருந்த ஒருவரிடம் காக்கி நிற கவரையும் ஜஹாங்கீர் வாங்கி வைத்துக் கொண்டார்.
ஜஹாங்கீர் பாஷா சென்ற காரை தொட்டபெட்டா சந்திப்பிற்கு முன்பு வழிமறித்து நிறுத்தி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில், பைகளில் உள்ள கவர்களில் பணம் இருப்பதை ஜஹாங்கீர் பாஷா ஒப்புக் கொண்டார். காரை நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கவர்களை மேஜையில் எடுத்து வைத்தனர்.
அதில், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் குடியிருப்பு பயன்பாட்டில் இருந்து வணிக பயன்பாட்டுக்கு வரி இனத்தை மாற்றிக் கொடுத்தமைக்கு, உரிமையாளர்கள் கொடுத்த லஞ்சப்பணம் 2 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் இருந்தது.
பச்சை கவரில் ரூ.2 லட்சம் இருந்தது. இது, தீபாவளிக்கு முன்பு சேரிங் கிராஸ் முதல் கேசினோ சந்திப்பு வரை பார்க்கிங் டென்டர் விடப்பட்டதும், டெண்டரை எடுத்த ரவிபிரசாத் என்பவர் கொடுத்த லஞ்சப்பணம் என தெரியவந்ததால் அதனையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதே பையில், காக்கி கவரில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் ரூ.2.50 லட்சம் இருந்தது. இந்த பணம், ஊட்டி கமர்ஷியல் சாலையில், பாரதியார் வணிக வளாகம் கடை எண் 1 மற்றும் 2ல் பாபு சுலைமான் பெயரில் உள்ள லிம்ரா கார்மென்ட்ஸ் துணிக்கடையை ஹோட்டலாக மாற்றுவதற்காக சாகுல் ஹமீது என்கிற சிராஜ் கொடுத்த லஞ்சப்பணம் என்பது தெரியவந்தது.
அவர் வைத்திருந்த சாம்பல் நிற துணிப்பையில் 4.71 லட்சம் ரூபாய் இருந்தது. அந்தப்பணம், குன்னூர் சாலையில் உள்ள சுவாதி டிரேடர்ஸ் கட்டடத்தின் பரப்பை குறைத்து சொத்து வரி விதித்ததற்காக தரப்பட்ட லஞ்சப்பணம் என்பது தெரியவந்தது.இப்படி மொத்தப்பணம், 11.70 லட்சம் ரூபாய் ஜஹாங்கீர் பாஷாவிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
வாகன டிரைவர் ராஜா கவுடாவிடம் விசாரித்த போது, ஜஹாங்கீர் பாஷா லஞ்சம் வாங்கியதையும், யார் யாரிடமும் பெற்றார் என்பதையும் உறுதி செய்தார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

