எல்.எல்.ஆர். தர ரூ.1,000 லஞ்சம்; வாகன இன்ஸ், புரோக்கர் கைது
எல்.எல்.ஆர். தர ரூ.1,000 லஞ்சம்; வாகன இன்ஸ், புரோக்கர் கைது
ADDED : டிச 14, 2025 07:48 AM

திருச்சி: திருச்சி மாவட்டம், குண்டூரைச் சேர்ந்தவர் பழனியப்பன். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருகிறார்.
இவரது மையத்தில் இருந்து, திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எல்.எல்.ஆர்.,க்கு விண்ணப்பித்த இருவருக்கு உரிய கட்டணங்கள் செலுத்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதியை, 45, அணுகியுள்ளார். அவரோ, 1,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான், அனுமதிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனியப்பன், இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., மணிகண்டனிடம் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தல்படி, 1,000 ரூபாய் லஞ்சப்பணத்தை, வாகன ஆய்வாளர் மணிபாரதிக்கு, அங்கு புரோக்கராக இருக்கும் திலீப்குமார், 35, மூலம் கொடுத்துள்ளார்.
அதை மணிபாரதி வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சென்று, கையும், களவுமாக அவரை பிடித்து கைது செய்தனர். லஞ்சப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரது மேஜையில் இருந்த, 13,000 ரூபாய் மற்றும் பிராட்டியூரில் உள்ள மணிபாரதி வீட்டில் நடந்த சோதனையில், 1.90 லட்சத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

