காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்றது; சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்றது; சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு
ADDED : டிச 18, 2024 01:47 PM

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (டிச.,18) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுவடைந்து, நேற்றைய நிலவரப்படி, தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில் நிலவியது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (டிச.,18) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு, வடமேற்கு திசையில், தமிழகம் நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, வடமாவட்டங்களில் அனேக இடங்கள், பிற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (டிச.,18) கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் மழை குறைய துவங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.