ADDED : மார் 05, 2026 03:44 AM
சென்னை: 'காலநிலை மாற்றம் காரணமாக, 'மெட்ராஸ் ஐ' எனப்படும், கண் தொற்று நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது' என, கண் டாக்டர்கள் தெரிவித்தனர்.
கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றான, 'மெட்ராஸ் ஐ' பாதிப்பு, காற்று வாயிலாக எளிதில் பரவக்கூடியது.
இத்தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை, மற்றவர்கள் உபயோகிப்பதன் வாயிலாக பரவக்கூடும்.
இந்நிலையில், குளிர்காலம் முடிந்து, வெயில் காலம் துவங்கும் பருவநிலை மாற்றத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அதிகம் பேர், 'மெட்ராஸ் ஐ' தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, எழும்பூர் அரசு கண் டாக்டர்கள் கூறியதாவது:
கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் போன்றவை, 'மெட்ராஸ் ஐ' பாதிப்பின் அறிகுறிகள். சமீப காலமாக, இதுபோன்ற அறிகுறியுடன், மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.
அதேநேரம், மெட்ராஸ் ஐ, எளிதில் குணப்படுத்தக்கூடிய, மிக சாதாரணமான நோய்.
ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றால், பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. அலட்சியம் செய்தால், தெளிவற்ற பார்வை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, ஆரம்ப நிலையிலேயே, டாக்டரிடம் சிகிச்சை பெறுவது அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

