சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின்: போலீசை வெளுத்து வாங்கியது ஐகோர்ட்
சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின்: போலீசை வெளுத்து வாங்கியது ஐகோர்ட்
UPDATED : டிச 26, 2025 04:07 PM
ADDED : டிச 26, 2025 02:57 PM

சென்னை: பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட யுடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. அப்போது, குறிப்பிட்ட தனிநபரை மிரட்ட சட்டத்தை பயன்படுத்தக்கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், போலீசாரை வெளுத்து வாங்கினர்.
பிரபல யுடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 13ம் தேதி போலீசார் அவரது வீட்டில் கைது செய்தனர். சென்னை நந்தனம் பகுதியில் ஹரிச்சந்திரன் என்ற பார் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் சவுக்கு சங்கரின் தாயார் சென்னை ஐகோர்ட், மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சிறையில் கார்டியாலஜிஸ்ட் மற்றும் நீரழிவு சிறப்பு மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
உத்தரவு
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியம் மற்றும் தனபால் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கருக்கு 2025 டிச., 26 ல் முதல் 2026 மார்ச் 25 வரை இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: நீங்கள் ஏன் பத்திரிகையாளர்களுக்கு பின்னால் ஓடுகிறீர்கள்? கருத்து வேறுபாடு என்பது ஒரு ஜனநாயக உரிமை. சட்டசபையில் கருத்து வேறுபாடு மதிக்கப்படுகிறது. கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துபவர்கள் யாராவது துன்புறுத்தப்பட்டால், நீங்கள் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறீர்கள்.
தலையீடு
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விரும்பினால், அவர்கள் அவதூறு வழக்கு மூலம் சிவில் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவை பெறலாம். அதற்கு உங்களை யாரும் தடுக்க முடியாது. தனி நபர் சுதந்திரம் என்ற விஷயத்தைத் தொட்டால் அது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளில் தலையிடுவதாக அமையும் .
நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களைக் கவனத்தில் கொண்டும், சிறைக்கைதியின் மருத்துவ நிலை மற்றும் அவரது சுதந்திரம் மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்தப்படுவதையும் கருத்தில் கொண்டு ஜாமினில் விடுவிக்க தயாராக உள்ளது. 2026 மார்ச் 25 ம் தேதிக்கு முன்னர் அவர் அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும்.
அதிகாரிகளின் நன்மதிப்பை இழந்த குறிப்பிட்ட நபர்களைக் குறிவைக்க சட்டத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. தனிநபருக்கு எதிராக தொடர்ச்சியாகக் காட்டப்படும் கடுமையான நடவடிக்கைகள், நாட்டின் குடிமக்களுக்கு சரியான செய்தியை அனுப்பாது.
மன உளைச்சல்
அதிகாரிகளின் துஷ்பிரயோகம் மூலம் சவுக்கு சங்கரை துன்புறுத்தியது மட்டுமல்லாமல், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளனர். அனைத்து காரணிகையும் கருத்தில் கொண்டு சவுக்கு சங்கர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. சாட்சிகளுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தனர்.

